தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி; 'டிஜிட்டல்' பெயர் சேர்ப்புக்கு அனுமதி
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி; 'டிஜிட்டல்' பெயர் சேர்ப்புக்கு அனுமதி
UPDATED : அக் 18, 2025 08:10 AM
ADDED : அக் 18, 2025 05:50 AM

புதுடில்லி: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான செயல்முறையை துவங்கும் வகையில், முதல் முறையாக பொது மக்களே, தங்களின் பெயர்களை சேர்த்து கொள்ளும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான நடைமுறையை வரும் நவம்பர் 1 முதல் 7ம் தேதி வரை, 'டிஜிட்டல்' முறையில் மேற்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.
'நேஷனல் சென்சஸ்' எனப்படும், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக, 2011ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்ததாக, 2021ல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, சென்சஸ் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியும், 2027 மார்ச் 1ல் துவங்கும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இதன்படி, இரண்டு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. முதல்கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியும், இரண்டாம் கட்டமாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027, பிப்ரவரி 1ம் தேதியும் துவங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து முதல்கட்ட கணக்கெடுப்புக்கான பயிற்சி, அடுத்த மாதம் 10 முதல் 30ம் தேதி வரை நடக்க உள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் இந்த மாதிரி கணக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், உண்மையான மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் கேட்டு பதில்கள் பெறப்படும்.
இதற்காக பொது மக்களே தங்கள் பெயர்களை சேர்த்து கொள்ளும் வசதியும் இந்த முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இவ்வாறு பெயர் சேர்ப்பதற்கான சோதனை வரும் நவ., 1 முதல் 7ம் தேதி வரை நடக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் செயல்திறனை சோதிக்கும் முயற்சியாகவே டிஜிட்டல் முறையில் மக்கள் தங்களின் பெயர்களை சேர்க்கும் வசதியை முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் ஏற்படும் நடைமுறை மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களை கண்டறிந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.