/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேந்திரன் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது
/
நேந்திரன் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது
ADDED : டிச 15, 2024 11:40 PM

மேட்டுப்பாளையம்; நேந்திரன் வாழைக்காயின் விலை, கடந்த வாரத்தை விட, இந்த வாரம் கிலோவுக்கு பத்து ரூபாய், விலை குறைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏலம் மையம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ஏலம் நடைபெறும்.
இந்த வாரம் விற்பனைக்கு மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, அன்னுார், பவானிசாகர், சத்தியமங்கலம் உள்பட சுற்றுப்பகுதிகளில் இருந்து, 3500க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
கடந்த வாரம் ஒரு கிலோ நேந்திரன் ரூ.60 முதல் 70 வரை ஏலம் போனது. அதனால் இந்த வாரமும் நேந்திரன் விலை உயர்வாக இருக்கும் என, விவசாயிகள் அதிக அளவில் வாழைத்தார்களை அறுவடை செய்து, விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆனால் கிலோவுக்கு பத்து ரூபாய் விலை குறைந்து ஏலம் போனது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வாழைத்தார் ஏல மைய நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, சின்னராஜ் ஆகியோர் கூறுகையில், '' கடந்த வாரம் ஏல மையத்திற்கு, நன்கு முதிர்ந்த நேந்திரன் வாழைத்தார்களை, விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதனால் ஒரு கிலோ நேந்திரன் அதிகபட்சமாக, 70 ரூபாய் வரை விற்பனையானது. இந்த வாரம் நன்கு முதிர்ச்சி அடையாத நேந்திரன் வாழைத்தார்களை, விவசாயிகள் அறுவடை செய்து, விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
அதனால் வியாபாரிகள் விலை குறைத்து ஏலம் கேட்டதால், ஒரு கிலோவுக்கு பத்து ரூபாய் குறைந்தது. நேந்திரன் ஒரு கிலோ ரூ.50 முதல் 55 வரையும், கதலி ரூ. 25 முதல் 30 வரை ஏலம் போனது.
பூவன் ஒரு வாழைத்தார் ரூ.200 முதல் 500, செவ்வாழை ரூ. 750 முதல் 1000, தேன் வாழை, ரூ.250 முதல் 550, ரஸ்தாளி, ரூ.200 முதல் 550, ரோபஸ்டா, ரூ.200 முதல், 400, மொந்தன் ரூ. 150 முதல் 350, பச்சைநாடன் ரூ.250 முதல் 450 வரை ஏலம் போனது.
வருகின்ற வாரங்களில் நன்கு முதிர்ந்த வாழைத்தார்களை, விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்தால் தான் நல்ல விலை கிடைக்கும்,'' என்றனர்.