/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுாலகத்துக்கு புதிய கட்டடம்; பணிகள் தீவிரம்
/
நுாலகத்துக்கு புதிய கட்டடம்; பணிகள் தீவிரம்
ADDED : பிப் 16, 2025 10:11 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மரப்பேட்டை நுாலக கட்டடம் கட்டும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. விரைவில் பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொது நுாலகத்துறைக்கு சொந்தமான கிளை நுாலகம் பொள்ளாச்சி மரப்பேட்டையில், 12 சென்ட் இடத்தில் கடந்த, 1954ல் அமைக்கப்பட்டது. ஒரு லட்சம் நுால்கள், 16 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட நுாலகமாக செயல்படுகிறது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் செயல்படும், 40 ஊர்ப்புற, பகுதிநேர மற்றும் கிளை நுாலகங்களின் ஊதிய மையமாகவும் உள்ளது.
நுாலகத்தின் கட்டடம் பழமையின் காரணமாக, மழைக்கு ஒழுகியதுடன் பரிதாபமான நிலைக்கு மாறியது. மழை நீர் உள்ளே புகுந்ததால், புத்தகங்களை பாதுகாப்பதிலும் சிரமம் ஏற்பட்டது.
அரிய வகை நுால்கள் மழையில் நனைந்து வீணகாமல் பாதுகாக்க வேண்டும் என்றும், நுாலகத்தை புதுப்பிக்க வேண்டுமென்பது, பொள்ளாச்சி வாசகர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது.
நீண்ட கால போராட்டத்துக்கு பின், கடந்த, 2019ம் ஆண்டு நுாலகம் பழைய குடிமைப்பொருள் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், அங்கு போதுமான கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் இல்லை. வாசகர்கள் அமர்ந்து படிக்க இட நெருக்கடி உள்ளது. எனினும் மாற்று கட்டடம் இல்லாததால், தொடர்ந்து அங்கேயே நுாலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்காக கடந்த, 2023ம் ஆண்டு செப்., மாதம் பழமை வாய்ந்த நுாலக கட்டடம் இடிக்கப்பட்டன. அதன்பின், நுாலகத்துறை சார்பில், ஒரு கோடி ரூபாய் செலவில் தரைதளம், முதல் தளத்துடன் கட்டுமான பணிகள் நடக்கிறது. இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
நுாலகத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நுாலக கட்டடம் கட்டும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை, 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மீதம் உள்ள பணிகளை முடித்து, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.