குறுந்தொழில்முனைவோருக்கு... புதிய நம்பிக்கை! குறைகேட்ட அதிசயம் நடந்தது
குறுந்தொழில்முனைவோருக்கு... புதிய நம்பிக்கை! குறைகேட்ட அதிசயம் நடந்தது
UPDATED : மே 17, 2026 03:41 AM
ADDED : மே 16, 2026 08:10 PM

கோவை: மாவட்ட தொழில் மையம் குறு, சிறு தொழில் நிறுவனங்களின் குறைகளை, அலுவலகத்துக்கே அழைத்து கேட்ட நிகழ்வு நடந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்திய இக்கூட்டம், கோவை குறுந்தொழில் முனைவோர்க்கு புதிய நம்பிக்கையை தந்துள்ளது. கோவை தொழில் நிறுவனங்கள், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. பிரச்னைகளை சரி செய்வதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொழில்துறையினரிடம் உள்ளது.
இந்நிலையில்தான், கோவை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் இந்த குறைகேட்கும் கூட்டம் நடந்துள்ளது.
மத்திய தணிக்கை துறையின் தமிழ்நாடு, புதுச்சேரிக்கான முதன்மை கணக்கு தணிக்கை அதிகாரி திருப்பதி வெங்கடசாமி கோவை குறு, சிறு நிறுவனத்தினரை அழைத்து குறைகளை கேட்டுள்ளார்.
துணை கணக்கு தணிக்கை அதிகாரி சுதாகர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முகம் சிவா குறைகளை கேட்டனர்.
இதில் கோவையின் பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற குறுந்தொழில் முனைவோர் சிலர் கூறியதாவது:
மின் கட்டணத்தை குறைக்க வேண்டும், மூலப்பொருள் விலை உயர்வை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும், ஜாப் ஆர்டர் நிறுவனங்களுக்கான ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும், கோவையில் குறுந்தொழிற்பேட்டை அமைக்க வேண்டும், குறு நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அமைச்சரவையில் தனித்துறை ஒதுக்க வேண்டும், ஏற்றுமதி சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம். அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இணைந்து நடத்திய இக்கூட்டம், எங்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இது தொடர வேண்டும் என்பதே விருப்பம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
