/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணிகள் முடிந்ததும் புது ரயில் இயக்கம்
/
பணிகள் முடிந்ததும் புது ரயில் இயக்கம்
ADDED : செப் 11, 2025 10:16 PM

கோவை; 'போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் மேம்பாட்டு பணிகள் முடிந்ததும் புதிய ரயில்கள் இயக்கப்படும்' என, கோட்ட ரயில் பயனாளர்கள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சேலம் ரயில்வே கோட்ட ரயில் பயனாளர்கள் ஆலோசனை குழு கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் பிட் லைன், ஸ்டாபிளிங் லைன், வண்டிகளுக்கு நீர் நிரப்பும் வசதி, போத்தனுார் - இருகூர் இரட்டை வழிப்பாதை, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நுழைவாயில், எஸ்கலேட்டர் வசதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டன.
கோவை - மங்களூர் (22609/ 22610), எர்ணாகுளம் - பெங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12677/ 12678), எர்ணாகுளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் (16187/16188), மேட்டுப்பாளையம்-துாத்துக்குடி வாராந்திர எக்ஸ்பிரஸ் (16765/16766) ஆகிய ரயில்கள் போத்தனுாரில் நின்று செல்ல வேண்டும். மதுரை - கோவை (16721/16722) ரயில் மேட்டுப்பாளையம் மற்றும் போடிநாயக்கனுார் வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதை கேட்டறிந்த ரயில்வே அதிகாரிகள், கோரிக்கைகளை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி, அனுமதி கிடைத்ததும் செயல்படுத்தப்படும். சில ரயில்கள் நிறுத்தத்துக்கு விரைவில் அனுமதி கிடைக்கும். ஸ்டேஷன்களில் மேம்பாட்டு பணிகள் முடிந்ததும் புதிய ரயில்கள் இயக்கப்படும் என, தெரிவித்தனர்.
சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.