ADDED : அக் 07, 2019 12:04 AM

'இது நல்ல எண்ணெயா...?''ஏம்பா, நீ கடலை எண்ணெய் தான கேட்ட, இப்ப நல்லெண்ணெயானு கேக்கறே...''இல்லப்பா... சுத்தமான, நல்ல கடலை எண்ணெயானு கேட்டேன்'- 'நல்ல எண்ணெய்' என்றதும், வடிவேலு பட காமெடி தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், எண்ணெயில் காமெடி செய்தால், வாழ்க்கை 'டிராஜிடி' ஆகி விடும் என்கின்றனர் டாக்டர்கள்.கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், எண்ணெய் தயாரிப்பின் பிரதானமே செக்குதான்.
செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட எண்ணெய் எல்லாமே, உடலுக்கு நன்மை தரும், 'நல்ல எண்ணெய்களாக' தான் இருந்தன.முன்னோர் ஆரோக்கிய ரகசியம்பொரிக்கவும், வறுக்கவும் கடலை எண்ணெய்; தாளிக்க, சமைக்க, எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய், வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் சில குறிப்பிட்ட சமையலில் சுவைக்கு தேங்காய் எண்ணெய்; உடல் சூட்டைத் தணிக்கவும், உடலில் உள்ள அழுக்கை நீக்கவும் விளக்கெண்ணெய் என, விஞ்ஞானம், டாக்டர்கள் சொல்லாத எண்ணெய்களை பயன்படுத்தி, நம் முன்னோர் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டனர்.
ஆனால், இன்று எதிலும் 'இன்ஸ்டன்ட்' தயாரிப்பை எதிர்பார்க்கும் மக்கள், கால மாற்றத்தில் எண்ணெய்களால், உடல் உபாதைகளை தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆயுளுக்கு எந்த ஆயில்?ரிபைண்டு ஆயிலா, செக்கில் ஆற்றிய ஆயிலா, மக்கள் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயா...இதில் எந்த ஆயில் உடலுக்கு நல்லது?கேள்வியை கேட்டதும், கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்திரவேல், சிரித்தார். ''ஒரே வகையான எண்ணெயைப் பயன்படுத்துவதைவிட, எல்லா வகை எண்ணெய்களையும் கலந்து பயன்படுத்துவது நல்லது,'' என்று கூறி, நம்மை மிரள வைத்தார்.
அவர் கூறியதாவது:ஒரே வகையான எண்ணெய் மட்டும் பயன்படுத்தும் போது, அது தீங்காக மாறி விடும். அதனால், எண்ணெய்களில் உள்ள நற்குணங்கள் மட்டும் உடம்பில் சேர, எல்லா வகை எண்ணெய்களையும், குறைந்தளவு பயன்படுத்தலாம். இதயத்துக்கு நல்லது என, கூறப்படும் சூரியகாந்தி ரீபைண்டு ஆயில், சிறுநீரகத்துக்கு நல்லது இல்லை.கொழுப்பில் தாவரம், மாமிச கொழுப்பு என, இருவகை உள்ளது.
தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற தாவரங்கள் மூலம் எடுக்கக்கூடிய எண்ணெய்களில் உள்ள கொழுப்பு, ரத்தக்குழாய்களில் நேரடியாக படிந்து, அதிக பாதிப்பை தராது.தேங்காய் எண்ணெய் நல்லதுதேங்காய் எண்ணெயில் கொழுப்புச்சத்து அதிகம் என்று நினைக்கிறோம். ஆனால், கேரளாவில் பெரும்பான்மையான மக்கள் தேங்காய் எண்ணெயைத்தான் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.
இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, கேரளாவில் குறைவு என, ஆய்வுகள் கூறுகின்றன. இதேபோல் புற்றுநோய் பாதிப்பும் அங்கு குறைவு. இதிலிருந்து தேங்காய் எண்ணெயின் நன்மைகள் புரியும்.மாமிசத்தில் கொழுப்புஇறைச்சி, இறால் போன்ற மாமிச உணவுகளாலும், உடலில் கொழுப்பு சேரும். இதை கட்டுப்படுத்தாமல், எண்ணெயில் மட்டும் கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதால், எந்தவித பலனும் இல்லை.எண்ணெயை குறைப்பதால் மட்டும், நோய்களை தடுக்க முடியாது. வாழ்க்கை முறையிலும் மாற்றம் தேவை. முன்னர், மக்களின் வாழ்க்கையில் உடலுழைப்புக்கு முக்கியத்துவம் இருந்தது.இன்று உடற்பயிற்சி செய்ய, டாக்டர் பரிந்துரை செய்ய வேண்டிய அவலம் உள்ளது. இயற்கை காற்றை சுவாசித்து, சூரிய ஒளி படும்படி, சாலையில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள், வீட்டுக்குள் எந்திரத்தில் செய்யும், உடற்பயிற்சிகளால் கிடைக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.
ஊட்டச்சத்து நிபுணர் ஜூலியட் ஷீபா கூறியதாவது:ஒருவர் அன்றாட உணவில், 15 மி.லி., வரை, எண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். ரத்தத்தில் எல்.டி.எல்., எனும் கெட்ட கொழுப்பைக் குறைத்து, எச்.டி.எல்., என்னும் நல்ல கொழுப்பை உருவாக்குவதே, நல்ல சமையல் எண்ணெய் என்கிறது உலக சுகாதார அமைப்பு.மாறாக, கலப்படம் செய்யப்பட்ட எண்ணெய், ரத்தத்தில் கொழுப்பை அதிகரித்து, இதய நோய், உடல் பருமன், ரத்த அழுத்தம் மட்டுமல்லாமல், புற்றுநோயை கூட உண்டாக்கி விடும்.நல்ல எண்ணெய் என்பது என்ன?செறிவுற்ற கொழுப்பு அமிலம், ஒற்றை செறிவுறா கொழுப்பு அமிலம், பன்முக செறிவுறா கொழுப்பு அமிலம் ஆகிய மூன்றுமே, நாம் உபயோகப்படுத்தும் எண்ணெயில் சரிவிகிதமாக கலந்திருக்க வேண்டும் என்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்துகிறது.
நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்றவற்றில், ஒற்றை செறிவுறா கொழுப்பு அமிலம் மற்றும் பன்முக செறிவுறா அமிலங்கள் அதிகமாக உள்ளன.செக்கு ஆயில் நல்லதுசமீபத்திய ஆய்வுகள், செக்கில் ஆட்டிய எண்ணெய்களினால், பிரச்னை இல்லை என்கிறது.
இதேபோல், ரீபைண்ட் ஆயில்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால், உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.டால்டா, நெய் போன்றவற்றை உடல்பருமன் உள்ளவர்கள் மிக குறைந்தளவு எடுத்துக் கொள்வது நல்லது. எதையும் அளவாக எடுத்துக் கொண்டால், உடல்நலத்துக்கு பாதிப்பில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
தேங்காய் எண்ணெயில் கொழுப்புச்சத்து அதிகம் என்று நினைக்கிறோம். ஆனால், கேரளாவில் பெரும்பான்மையான மக்கள் தேங்காய் எண்ணெயைத்தான் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, கேரளாவில் குறைவு என, ஆய்வுகள் கூறுகின்றன.
இதேபோல் புற்றுநோய் பாதிப்பும் அங்கு குறைவு.- டாக்டர் சவுந்திரவேல்இருப்பிட மருத்துவர், கோவை அரசு மருத்துவமனை.பொரிக்கவும், வறுக்கவும் கடலை எண்ணெய்; தாளிக்க, சமைக்க, எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய், வாய்ப்புண், சில குறிப்பிட்ட சமையலில் சுவைக்கு தேங்காய் எண்ணெய்; உடல் சூட்டைத் தணிக்கவும், உடலில் உள்ள அழுக்கை நீக்கவும் விளக்கெண்ணெய் என... விஞ்ஞானமும் டாக்டர்களும் சொல்லாத எண்ணெய்களை பயன்படுத்தி, நம் முன்னோர் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டனர்.
