/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் விலை உயர்வு இல்லை; விவசாயிகள் ஏமாற்றம்
/
வாழைத்தார் விலை உயர்வு இல்லை; விவசாயிகள் ஏமாற்றம்
ADDED : அக் 16, 2025 08:59 PM
மேட்டுப்பாளையம்: நேந்திரன், கதளி மற்றும் வாழைத்தார்களின் விலை உயர்வு இல்லாததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏல மண்டி உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ஏலம் நடைபெறும். புதன் கிழமை நடந்த ஏலத்திற்கு காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம், அன்னூர், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் இருந்து, 7,500 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
மண்டியில் நடந்த ஏலத்தில், நேந்திரன் ஒரு கிலோ அதிகபட்சம், 20 ரூபாய்க்கும், கதளி அதிகபட்சம், 35 ரூபாய்க்கும் ஏலம் போனது. மற்ற வாழைத்தார்கள் ஏலம் போனதில், பூவன் ஒரு தார் அதிகபட்சம், 500 ரூபாய்க்கும், ரஸ்தாலி அதிகபட்சம், 550க்கும், தேன் வாழை அதிகபட்சம், 750க்கும், செவ்வாழை அதிகபட்சம், 900 ரூபாய்க்கும், மொந்தன் அதிகபட்சம், 400க்கும், ரோபஸ்டா அதிகபட்சம், 250 ரூபாய்க்கும் ஏலம் போனது.
தீபாவளி முன்னிட்டு வாழைப்பழத்தின் பயன்பாடு அதிகம் இருக்கும் என, விவசாயிகள் வாழைத்தார்களை அறுவடை செய்து, விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் எதிர்பார்த்த விளையும், விலை உயர்வும் இல்லாததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இத்தகவலை வாழைத்தார் ஏல மண்டியின் நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, சின்னராஜ் ஆகியோர் கூறினர்.