/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'எதை அடக்கினாலும் சிறுநீரை அடக்காதீங்க!'
/
'எதை அடக்கினாலும் சிறுநீரை அடக்காதீங்க!'
ADDED : ஜூன் 07, 2025 11:34 PM

வெயில் அதிகமாக உள்ள சூழலில், சிறுநீரக கற்கள் பாதிப்பு அதிகரிக்கும். ஆகவே, சிறுநீரை அடக்குவதை தவிர்க்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுவாக, சிறுநீரக பாதையில் 'அமார்பஸ் பாஸ்பேட்' உப்பு அல்லது 'கால்சியம் ஆக்சலேட்' உப்பு போன்ற தாதுக்கள் சிறிய வடிவில், நெருஞ்சி முள் போன்ற உருண்டையாக உருவாகிறது.
உடலில் உருவாகும் தேவையற்ற, அதிகப்படியான கால்சியம் போன்ற வகை உப்புகள், சிறுநீர் வழியாக வெளியேற வேண்டும்.
சிறுநீரகத்தில் அமிலத்தன்மை, காரத்தன்மை சமநிலையின்மையால் இவை வெளியேறாமல் சிறுநீரகப்பாதையை அடைத்து, படிமங்களாக படிந்து, நாளடைவில் கற்களாக உருவாகின்றன. அவை நகர்வதால் கடுமையான வலி வருகிறது.
கோடைக்காலம், வெயில் அதிகம் உள்ள பருவ சூழல்களில், இப்பிரச்னை அதிகமாகிறது. குறிப்பாக ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது என்கிறார், ஹோமியோபதி டாக்டர் பார்த்திபன்.
இது குறித்து அவர் கூறியதாவது:
சிறுநீரக கற்கள் பல வகைகள் உண்டு. -இந்த பாதிப்பு ஏற்படுபவர்களில், சராசரியாக கால்சியம் ஆக்சலேட் 75 சதவீதம் பேர்களுக்கும்,கால்சியம் பாஸ்பேட் 15 சதவீதம் பேருக்கும், யூர்க் அசிட் 8 சதவீதம் பேருக்கும் ஏற்படுகிறது.
கல் இருப்பது உறுதியானால், உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதை தவிர்க்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டால், ஆபத்தில்லாமல் கற்களை வெளியேற்றிவிடலாம்.
சிறுநீரகம், சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் இறங்கி வரும் குழாய்கள், சிறுநீர்ப்பை இந்த மூன்று இடங்களில், எங்கு வேண்டுமானாலும் கல் உருவாகலாம்.
ஹோமியோபதி சிகிச்சையில், சிறுநீரக கற்கள் பிரச்னையை முற்றிலுமாக குணப்படுத்தலாம். கல் வடிவம், கல் உருவாகியுள்ள இடம் ஆகிய நிலைகளுக்கு தகுந்தாற்போல, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
20 மி.மீ.,அளவுள்ள கற்களையும், ஹோமியோபதி மருந்துகள் வாயிலாக, அறுவை சிகிச்சையின்றி கரைத்துவிட முடியும்.வெயில் அதிகமாக உள்ள பருவ சூழல்களில், இப்பாதிப்பு அதிகம் காணப்படும் என்பதால், அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரை அடக்கிவைத்தல் கூடாது, சிறுநீர் பாதையை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.