தக்காளி அறுவடை செய்யும் கூலிக்கு கூட... விலை இல்லை: ரூ.15க்கு வாங்கி ரூ.30க்கு விற்பனை
தக்காளி அறுவடை செய்யும் கூலிக்கு கூட... விலை இல்லை: ரூ.15க்கு வாங்கி ரூ.30க்கு விற்பனை
UPDATED : ஆக 15, 2026 05:00 AM
ADDED : ஆக 14, 2026 06:10 PM

மேட்டுப்பாளையம்:தக்காளி விலை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து, அறுவடை செய்யும் கூலிக்கு கூட, விலை கிடைப்பதில்லை என, விவசாயிகள் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம் தாலுகாவில் காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், விவசாயிகள் தக்காளி பயிர் செய்துள்ளனர். தற்போது தக்காளி அறுவடை செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. மார்க்கெட் கடைகளில், ஒரு கிலோ தக்காளி, 25, 30 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். வண்டிகளில், கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். அதனால் பழங்களை அறுவடை செய்யும் கூலிக்கு கூட, விலை கிடைப்பதில்லை என, விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தற்போது நடவு செய்யும் தக்காளி செடிகள் உயரமாக வளரக்கூடியவை. அதனால் செடிகள் கீழே தரையில் விழாமல் இருக்க, உயரமாக கம்பியில் தூக்கி கட்ட வேண்டும். அதற்கு தோட்டத்தில் குச்சிகள் நடவு செய்து, குச்சிகளில் கம்பிகள் கட்ட வேண்டும். வளர்ந்த செடிகளை கம்பியில் படர விட வேண்டும். களை எடுக்க வேண்டும், பூச்சி மருந்து அடிக்க வேண்டும், உரம் வைத்து தண்ணீர் பாய்ச்சு வேண்டும். இவை அனைத்தும் வழக்கமான பணிகளாகும். இப்பணிகள் செய்ய ஒரு ஆணுக்கு தினக் கூலியாக, 700 ரூபாய் வரை கொடுக்க வேண்டி உள்ளது. நன்கு வளர்ந்த செடிகளில், நடவு செய்த அறுபதாவது நாளில், தக்காளி பழம் அறுவடை துவங்கும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை, ஒரு மாதம் வரை தக்காளிப் பழம் அறுவடை செய்யலாம். அறுவடை செய்யும் பெண்களுக்கு தினக்கூலி, 350 லிருந்து, 400 ரூபாய் வரை கூலி கொடுக்க வேண்டி உள்ளது.
தற்போது ஒரு பெட்டி தக்காளி, 350 லிருந்து, 400 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. ஒரு பெட்டியில், 25 கிலோ தக்காளி இருக்கும். வியாபாரிகள் தோட்டத்தில் ஒரு கிலோ தக்காளிக்கு, 14, 15 ரூபாய் விலை கொடுக்கின்றனர். ஆனால் கடைகளில் ஒரு கிலோ தக்காளி, 25, 30 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். விவசாயிகளுக்கு, தக்காளி பழத்தை அறுவடை செய்யும் கூலிக்கு கூட விலை கிடைப்பதில்லை. தோட்டத்தில் ஒரு கிலோ, 30 ரூபாய்க்கு விற்பனை ஆனால் தான், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். சரியான விலை கிடைக்காததால், பல தோட்டத்தில் தக்காளி பழங்களை அறுவடை செய்யாமல், விவசாயிகள் விட்டுள்ளனர். தக்காளிக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய முடியாது. அதே நேரத்தில் இவ்வளவு விலை குறைவாக விற்பனை செய்யும் போது, அரசு விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
