ADDED : மார் 13, 2026 06:24 AM

கோவை:கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரியின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்(இ.சி.இ,) துறை சார்பில் 'மேம்பட்ட கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள்' என்ற தலைப்பில் ஏழாவது தேசிய அளவிலான கருத்தரங்கு நேற்று நடந்தது.
பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியின் இ.சி.இ., துறை இணை பேராசிரியர் சரவணன் பேசுகையில்,''தகவல் தொடர்பு அமைப்புகள், கம்ப்யூட்டர் சார்ந்த அம்சங்களுக்கு அடிப்படையே மின்னணுவியல்தான். எந்தவொரு துறையும் இன்று செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தொழில்நுட்பம் இல்லாமல் கடந்துசெல்ல முடியாது. எனவே, மாணவர்கள் ஏ.ஐ., மீது கட்டாயம் ஆர்வம் செலுத்த வேண்டும். தொழில்துறை மாற்றங்களை உணர்ந்து புத்தாக்க திறனுடன் செயல்படுவது முக்கியம். எப்போதும் புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டும்,'' என்றார்.
இதில், மாணவர்களிடம் இருந்து 80 ஆய்வு கட்டுரைகள் பெறப்பட்டதில் 40 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. கல்லுாரி முதல்வர் மனோன்மணி, இ.சி.இ., துறை தலைவர் சாந்தி, பேராசிரியர் திருஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
