/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எந்த வேலையும் உருப்படியாக நடக்கவில்லை!'
/
எந்த வேலையும் உருப்படியாக நடக்கவில்லை!'
UPDATED : பிப் 23, 2026 07:31 AM
ADDED : பிப் 23, 2026 06:59 AM

மாநகராட்சி மேற்கு மண்டலம் 16வது வார்டானது பட்டீஸ்வரர் அவென்யூ, காமராஜ் நகர், காயத்ரி கார்டன், கொங்கு கார்டன், அருணாச்சலா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளை கொண்டுள்ளது. தடாகம் ரோடு, இடையர்பாளையத்தில் இருந்து கே.என்.ஜி.புதுார், கவுண்டம்பாளையம் பகுதிகளுக்கு செல்வோர் இந்த வழித்தடங்களை பயன்படுத்துகின்றனர்.
தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகம் உள்ள இந்த வார்டில் ரோடு, மாநகராட்சி பூங்கா, பாம்பு தொல்லை என பிரச்னைகள் ஏராளமாக இருப்பதாக குடியிருப்புவாசிகள் குமுறுகின்றனர். மூன்று மாதங்களுக்கு முன்பு மேயர், மாநகராட்சி அதிகாரிகள் வார்டில் ஆய்வு செய்து சென்ற பின்பும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என, புலம்பி தீர்க்கின்றனர்.
வார்டில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கவுன்சிலர் தமிழ்செல்வனிடம்(தி.மு.க.) கேட்டபோது, அவர் கூறியதாவது:
வித்யா காலனியில் பூங்கா பராமரிக்கப்படும். ஐந்தாவது வீதியில் அடுத்த வாரம் ரோடு போடும் பணி துவங்கப்படும். ஐஸ்வர்யா கார்டன் முதல் அருணாச்சலம் அவென்யூ வழியாக டி.வி.எஸ். நகர் வரை 2 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைக்க கடந்த மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு மழைநீர் வடிகால் அமைக்கப்படும். புதிதாக தெரு விளக்குகள் வந்துள்ளன.
எரியாத தெரு விளக்குகள் சரி செய்யப்படும். காமராஜ் நகரில் பொது கழிப்பிடம் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எனது வார்டில் பரவலாக 10 போர்வெல், 180க்கும் மேற்பட்ட புதிய தெரு விளக்குகள் நிறுவியுள்ளேன். எம்.ஜி.ஆர். நகரில் ரூ .1.50 கோடியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, காமராஜ் நகரில் நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வார்டில் இதுவரை ரூ.12 கோடியில் ரோடு போடப்பட்டுள்ளது. காமராஜ் நகரில் மழை காலங்களில் தண்ணீர் புகுந்துவந்தது. சிமென்ட் ரோடு, தடுப்பு அமைத்து தவிர்க்கப்பட்டது. வேறு பிரச்னைகள் இருந்தாலும் விரைவில் சரி செய்யப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
'பராமரிப்பில்லை'
அருணாச்சலம் அவென்யூ கிழக்கே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான 'ரிசர்வ் சைட்' ஆக இருந்தது. பின்னர் குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த இடமும் பராமரிப்பின்றி மோசமாக உள்ளது. இதை பராமரிக்காததால் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
-தேவி, இல்லத்தரசி.
'12 ஆண்டு போராட்டம்'
வித்யா காலனியில் ஐந்து வீதிகள் உள்ளன. இதில் ஐந்தாவது வீதியில் யு.ஜி.டி. பணிகள் முடிந்தும் ரோடு போடவில்லை. 12 ஆண்டுகளாக ரோடு கேட்டு பல வழிகளிலும் போராடி விட்டோம். மழை காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்குகிறது. வயதானவர்கள், குழந்தைகள் விழுந்து காயமடைகின்றனர். இந்த ரோடு கே.என்.ஜி. புதுார், கவுண்டம்பாளையம் செல்வதற்கான இணைப்பு ரோடு. இந்த வீதியை மட்டும் ஏன் புறக்கணிக்கிறார்கள் என்று தெரியவில்லை. -
-கண்ணன், சிவில் இன்ஜினியர்.
'நிதி இல்லையா?'
கே.என்.ஜி. புதுார் ரோட்டையொட்டி செல்லும் கால்வாய் புதர்மண்டி கிடப்பதால் தண்ணீர் செல்வது தடைபடுகிறது. இதை கடக்கும் பாலமும் ரோட்டையொட்டி பக்கவாட்டு சுவரின்றி உள்ளது. பாலத்தை நேர்கோட்டில் அமைத்து தருவதாக மூன்றுமாதங்களுக்கு முன் மேயர் தெரிவித்து சென்றார். புதிதாக அமைக்கப்பட்ட தெரு விளக்குகள்கூட எரிவதில்லை. ரோடு மோசமாக உள்ளது. கேட்டால் நிதி ஒதுக்கவில்லை என்கின்றனர். தி.மு.க.ஆட்சியே முடியவுள்ள நிலையில் நான்கரை ஆண்டுகளாக நிதியே இல்லையா?
-பாண்டியராஜ் சுயதொழில்.
'பாம்பு'
பூங்கா வித்யா காலனியில் உள்ள மாநகராட்சி பூங்கா பராமரிப்பின்றி இருக்கிறது. ஊஞ்சல் சங்கிலி 'கட்' ஆகி சிதிலம்அடைந்து கிடக்கிறது. உள்ளே வெட்டப்பட்ட மரங்கள் அகற்றப்படாததால் புதர்மண்டி பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் கூடாரமாக மாறிவிட்டது. வீடுகளுக்குள் அடிக்கடி பாம்புகள் வருகின்றன. பூங்காவில் உள்ள விளக்குகளும் எரிவதில்லை. குழந்தைகளை விளையாட விடவே பயமாக உள்ளது.
-கிருத்திகா இல்லத்தரசி.

