ADDED : செப் 18, 2026 08:13 PM
கோவை: அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணி அடிப்படையில், நர்ஸ்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு மருத்துவமனைகளில், 4,726 நர்ஸ்களை தற்காலிக பணி அடிப்படையில் நிரப்ப 10ம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்புக்கு முன்பே, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி.,) நடத்திய போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது 11 மாத தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், எம்.ஆர்.பி., எழுதாதோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கொரோனா காலத்தில் பணிக்கு அமர்த்திய 2 ஆயிரத்து 500 பேர், 2022 டிச., மாதத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்காமல், புதிய நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், சங்க மாவட்ட தலைவர் ராமலட்சுமி, செயலாளர் தங்க முனீஷ்வரி, பொருளாளர் சிவபிரியா மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
