ADDED : செப் 01, 2026 07:21 PM
அன்னூர்: சத்துணவு ஊழியர்கள் அன்னூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில், ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு அமைப்பாளரும், ஐந்து முதல் எட்டு சத்துணவு மையங்களை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். உடனடியாக காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
40 ஆண்டுகளாக நிரந்தரமாக செயல்பட்டு வரும் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை, சத்துணவு திட்டத்தோடு இணைக்க வேண்டும்.
இதற்கான அறிவிப்புகளை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், நேற்று மாலை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர். ஒன்றிய நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
