/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நோய்களுக்கு அஸ்திவாரமாகும் உடல் பருமன்
/
நோய்களுக்கு அஸ்திவாரமாகும் உடல் பருமன்
ADDED : டிச 01, 2024 01:22 AM

முதுமை கால உடல் பருமன் ஆரோக்கியத்தை கெடுத்து சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் என பல்வேறு நோய்களுக்கு அடித்தளமாக இருக்கிறது. சுயமாக எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல், வேறு ஒருவரை சார்ந்து இருக்க வேண்டி உள்ளது. எடையை குறைத்து ஆரோக்கிய மாக வாழ சில குறிப்புகளை கூறினார் புரோபொனிடிஸ் உடற்பயிற்சியாளர் செல்வகுமார்.
முதுமை காலத்தில் உடற்பருமன் பல உடல் வியாதிகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. முதுமை காலத்தில் ஏற்படும் உடற்பருமனை, உடற்பயிற்சி வாயிலாக குறைக்கலாம்.
இளைஞர்களை தாண்டி தற்போது அதிகமான அளவு வயதான ஆண், பெண்கள் ஜிம்மிற்கு வர துவங்கி உள்ளனர். அவர்கள் ஜிம்மிற்கு வரும் போது அவர்களது உடல்நிலை குறித்து முதலில் கேட்டு அறிந்து அதற்கு ஏற்றார்போல் பயிற்சிகள் வழங்கப்படும்.
அதிகமான முதியவர்களுக்கு மொபைல் போன் பொழுதுபோக்காக மாறி விட்டது. இதனால் அவர்கள் கழுத்து வலியால் அவதிப்படுகின்றனர். இது போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு உடற்பயிற்சி வாயிலாக தீர்வு காண முடியும்.
ஜிம்மிற்கு வர முடியாதவர்கள் வீட்டில் சூரிய நமஸ்காரம், நடைபயிற்சி மேற்கொள்ளலாம். முதல் வாரம், 10 நிமிடம் அல்லது ஒரு கிலோ மீட்டர் என நிர்ணயித்து நடைபயிற்சி செல்ல வேண்டும். அடுத்த வாரம் நிமிடத்தையோ துாரத்தையோ அதிகரித்து கொள்ளலாம். இவ்வாறு படிப்படியாக நடைபயிற்சியை அதிகரித்து கொள்ள வேண்டும். ஜங் புட்சை தவிர்க்க வேண்டும். பசி எடுக்கும் போது எடுத்து கொள்ளும் உணவு தான் ஆரோக்கியமானது. காலை, மதியம், இரவு சாப்பிட வேண்டும் என்ற கட்டாயத்தில் முதியவர்கள் உணவருந்தி வருகிறார்கள். மதியம் உணவுக்கான நேரம் வந்தாலும் பசி இல்லை என்றால் சாப்பிடாமல் மாலைக்கும், இரவுக்கும் உள்ள இடைவெளியில் உணவை எடுத்து கொள்ளலாம். உடல் எடையை குறைக்க திட்டமிடும் போது ஆரோக்கியமும் முக்கியம்.
மாதத்தில் 10 கிலோ குறைப்பது என்பது ஆபத்தில் முடியலாம். 3 முதல் 4 கிலோ வரை குறைப்பது தான் சரியான உடற்பயிற்சியாக இருக்கும். முதுமை காலத்தில் பெரும்பாலானோர் தனிமையில் தான் உள்ளார்கள். அவர்கள் எந்த ஒரு உதவியும் இல்லாமல், நீண்ட ஆயுளுடன் இருக்க உடற்பயிற்சி அவசியம். உடலை கோவிலாக பார்த்து உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.