/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஊட்டி உருளை கிழங்கு
/
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஊட்டி உருளை கிழங்கு
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஊட்டி உருளை கிழங்கு
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஊட்டி உருளை கிழங்கு
ADDED : ஜூன் 29, 2025 11:40 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி உருளைக்கிழங்குகள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு கப்பலில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில் 70க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. இதுதவிர நெல்லித்துறை சாலையில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கமும் உள்ளது.
தினமும் மண்டிகளுக்கு வரும் உருளைக்கிழங்குகளில் சுமார் 50 சதவீதம் கேரளாவுக்கு செல்கிறது.மீதம் உள்ள 50 சதவீதங்களில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர்; ஈரோடு மாவட்டத்தில் திம்பம், தாளவாடி, கேர்மாளம்; கர்நாடகா மாநிலத்தில் உடையர்பாளையம், சாம்ராஜ் நகர், கோலார், குஜராத், மகாராஷ்டிராவில் இந்தூர்; உத்திரபிரதேசத்தில் ஆக்ரா; உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் பல நூறு டன் உருளைக்கிழங்குகள் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
ஆனால் இதில் ஊட்டி உருளைக்கிழங்களுக்கு என தனி ருசி உள்ளதால், மற்ற மாநிலங்களின் கிழங்கை விட மவுஸ் எப்போதும் அதிகம். குறிப்பாக மேட்டுப்பாளையம் மண்டிகளில் இருந்து ஊட்டி உருளைக்கிழங்குகள் இலங்கை, மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதுகுறித்து நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் துணை பதிவாளர் முத்துக்குமார் கூறியதாவது:-
உருளை கிழங்குகளை வியாபாரிகள் ஏலம் எடுத்து கப்பலில் ஒரு டிரிப்பிற்கு 500 முதல் 700 டன் வரை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஊட்டி உருளைக்கிழங்குகள் வரத்து மற்றும் சீசனுக்கு ஏற்றார் போல் விலை இருக்கும் 45 கிலோ எடை கொண்ட மூட்டை எங்கள் சங்கத்தில் அதிகபட்சமாக ரூ.4,600 வரை கூட விற்பனை ஆகி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி 45 எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.3,000 வரை விற்பனை ஆகி வருகிறது. தினமும் 1,500 முதல் 2,000 மூட்டைகள் சீசன் நேரத்தில் லோடு வரும். மற்ற நாட்களில் 500 முதல் 1,000 மூட்டைகள் லோடு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மட்டும் கடந்த 2023--2024ம் நிதியாண்டில் 20 ஆயிரத்து 677 மெட்ரிக் டன் ஊட்டி உருளைக்கிழங்குகள், ரூ.54 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 20 ஆயிரம் மெட்ரிக் டன் உருளைக்கிழங்குகள், ரூ.72 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 50 சதவீதம் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.------