ADDED : ஜூன் 09, 2025 11:02 PM
கோவை; மாரடைப்பால் இறந்தவரின் மனைவிக்கு, மருத்துவ காப்பீடு தொகை 3.09 லட்சம் ரூபாய் மற்றும் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
கோவை, வீரகேரளம் அருகேயுள்ள சுண்டப்பாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ்,55, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், மருத்துவ காப்பீடு செய்திருந்தார்.
அவருக்கு, 2023ல் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதய அறுவை சிகிச்சைக்கு பிறகு வீட்டில் ஓய்வில் இருந்த போது, மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
இதனால் மருத்துவ செலவு தொகை, 3.09 லட்சம் ரூபாய் வழங்க கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அவரது மனைவி சரஸ்வதி விண்ணப்பித்தார். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம், மருத்துவ செலவு தொகை வழங்காமல் காலதாமதம் செய்தது.
மருத்துவ செலவு தொகை மற்றும் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், சரஸ்வதி வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு மருத்துவ செலவு தொகை, 3.09 லட்சம் ரூபாய் மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.