அனுமதியற்ற விளம்பர பலகைகளை இந்த வாரத்துக்குள் அகற்ற உத்தரவு
அனுமதியற்ற விளம்பர பலகைகளை இந்த வாரத்துக்குள் அகற்ற உத்தரவு
ADDED : ஏப் 09, 2025 10:42 PM
கோவை; கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில், ஐகோர்ட் உத்தரவுகளை மீறி, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கருமத்தம்படி நகராட்சி பகுதியில், பிரதான சாலையின் இருபுறமும் உள்ள கட்டடங்களின் மேற்புரப்பில், வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல், நீலாம்பூர் ஊராட்சி, சின்னியம்பாளையம் ஊராட்சிகளிலும், மதுக்கரை நகராட்சி பகுதியில் பாலக்காடு மெயின் ரோடு மற்றும் மதுக்கரை மார்க்கெட் மெயின் ரோட்டிலும் விளம்பர பலகைகள் காணப்படுகின்றன.
மாநகராட்சி பகுதியில் கோல்டுவின்ஸ், சிட்ரா, வரதராஜபுரம், சிங்காநல்லுார், பீளமேடு, அவிநாசி ரோடு பழைய மேம்பாலம், டெக்ஸ்டூல் பாலம் உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பகுதிகளில், விளம்பர பலகைகள் காணப்படுகின்றன.
ரயில்வே இடங்களில் இருந்த விளம்பர பிளக்ஸ்களை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கிழித்து விட்டனர். ஆனால், இரும்பு சட்டங்களை இன்னும் அகற்றாமல் இருக்கின்றனர். அவற்றை வெட்டி எடுக்க, சுபமுகூர்த்த நாள், நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுதொடர்பாக, கலெக்டரிடம் கேட்டபோது, 'அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்றுவது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது; இந்த வாரத்துக்குள் அகற்றப்படும்' என்றார்.
