ADDED : அக் 30, 2025 01:03 AM

கோவை: கோவையில் பெயின்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூவருக்கு ஆயுள் சிறை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கோவை, ரத்தினபுரி, தில்லை நகரில் வசித்தவர் சீனிவாசன், 27; பெயின்டர். இவரது சகோதரர் விக்னேஷ்வரன்,29. இவர்கள் இருவரும் பல்வேறு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தனர். ரத்தினபுரி பகுதியை சேர்ந்த ஜோஸ் என்பவர் விக்னேஷ்வரனை பார்த்து, 'இனி எப்போது ஜெயிலுக்கு போவாய்' என கேலி செய்துள்ளார். இதனால், விக்னேஷ்வரன் கோபமடைந்து ஜோசை தாக்கியுள்ளார்.
இதுகுறித்து தனது நண்பர்களான ரத்தினபுரி நாரயணசாமி லே அவுட்டை சேர்ந்த ஜீனத்குமார்,28, செந்தில்குமார்,28, சூர்யபிரகாஷ்,31, ஆகியோரிடம் கூறியிருக்கிறார். ஜோஸ் தாக்கப்பட்டது குறித்து கேட்பதற்காக, 2017, அக். 10ல், விக்னேஷ்வரனை தேடிச் சென்றனர். சீனிவாசனிடம், விக்னேஷ்வரன் இருக்கும் இடத்தை கேட் டுள்ளனர். தகவல் தெரிவிக்க மறுத்ததால், மூன்று பேரும் சேர்ந்து பைக்கில் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, கணபதி - வெள்ளக்கிணறு பகுதியில் வைத்து சீனிவாசனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பினர்.
துடியலுார் போலீசார் விசாரித்து மூவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது, கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி பாபுலால், குற்றம் சாட்டப் பட் ட ஜீனத்குமார், செந்தில்குமார், சூர்யபிரகாஷ் ஆகியோருக்கு, ஆயுள் சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கணேசன் ஆஜரானார்.
