/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பந்தல் காய்கறிகள், பாக்கு ஏலம்
/
பந்தல் காய்கறிகள், பாக்கு ஏலம்
ADDED : ஜன 03, 2025 10:18 PM
ஆனைமலை; ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பந்தல் காய்கறிகள், பாக்கு ஏலம் நேற்று நடந்தது.
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக, பந்தல் சாகுபடியில் உள்ள காய்கறிகள் ஏலம் நேற்று துவங்கப்பட்டுள்ளது.
விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தலைமை வகித்தார். முதல் நாளான நேற்று ஆறு மூட்டை பாகற்காய் வரத்து இருந்தது. கிலோ, 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
அதில், 8,940 ரூபாய் மதிப்பிலான, 2.98 குவிண்டால் பாகற்காய் விற்பனையானது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில், பந்தல் காய்கறி ஏலம் நடைபெறும்; இதை விவசாயிகள்பயன்படுத்திக்கொள்ளலாம் என விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
அதேபோன்று, பாக்கு ஏலமும் நேற்று நடந்தது. ஒரு மூட்டை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. கிலோ, 135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதில், 3,915 ரூபாய் மதிப்பிலான, 0.29 குவிண்டால் பாக்கு விற்பனையானது.