ADDED : ஜன 22, 2025 11:28 PM

சூலுார்; கோவை போத்தனூர் மேட்டூர் கருப்பண்ண கவுண்டர் வீதியை சேர்ந்த ஜமாலுதீன் மகன் ஜாகிர் உசேன், 44. இவர் மீது கடந்த, 2021 ஆண்டு திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் போக்சோ உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கோர்ட்டால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
கடந்த மே மாதம், தாயாரை பார்க்க பரோலில் வந்துள்ளார். தினமும் சூலுார் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து இடவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. மூன்று நாட்கள் மட்டும் வந்து கையெழுத்திட்ட அவர், தலைமறைவானார். இதுகுறித்து சூலுார் போலீசார், கோர்ட்டுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, புழல் சிறை அலுவலர் இளங்கோ சூலுார் போலீசில் புகார் அளித்தார்.
தனிப்படை அமைத்து, கடந்த ஆறு மாதமாக ஜாகீர் உசேனை போலீசார் தேடி வந்தனர். மும்பையில் இருந்து கோவை வருவதாக அறிந்த சூலுார் போலீசார், காந்திபுரத்தில் அவரை பிடித்தனர். சூலுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
