/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை கைகொடுத்ததால் கவாத்து பணி தீவிரம்
/
மழை கைகொடுத்ததால் கவாத்து பணி தீவிரம்
ADDED : மே 01, 2025 04:42 AM

வால்பாறை : வால்பாறையில், கோடை மழை கைகொடுத்ததால் தேயிலை செடிகளில் கவாத்து பணி தீவிரமாக நடக்கிறது.
வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில், 25 ஆயிரம் ெஹக்டேர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர, சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.
பல்வேறு எஸ்டேட்களில் தயாரிக்கப்படும் தேயிலை துாள், கோவை, கொச்சி, குன்னுார் போன்ற ஏல மையங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வால்பாறையில் கடந்த ஒரு மாதமாக கோடை மழை பரவலாக பெய்து வருவதால், தேயிலை செடிகளில் கவாத்து பணி நடக்கிறது.
தோட்ட அதிகாரிகள் கூறியதாவது: தேயிலை செடிகள் புத்துணர்ச்சி பெறும் வகையில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை செடிகளுக்கு கவாத்து பணி நடக்கிறது. தற்போது கோடை மழை பரவலாக பெய்யும் நிலையில், கவாத்து செய்வதால், 90 நாட்கள் கழித்து மீண்டும் தேயிலை செடிகள் துளிர்விடும்.
அதன் பின், வழக்கம் போல் உற்பத்தியும் அதிகரிக்கும். கொசுவின் பிடியில் இருந்து தேயிலையை பாதுகாக்க பூச்சிக்கொல்லி மருந்துகளும் அவ்வப்போது தெளிக்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினார்.

