ADDED : மார் 09, 2026 07:00 AM

மேட்டுப்பாளையம்: தவக்காலத்தை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை வரை நடந்த, பாவப்பரிகார பாதயாத்திரை பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில், தவக்காலம் கடந்த மாதம் 18ம் தேதி திருநீற்று புதனுடன் துவங்கியது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சிலுவைப்பாதையும், திருப்பலியும் நடந்தது. தினமும் காலையில் திருப்பலியும், சிறிய சிலுவை பாதையும் நடைபெறுகிறது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் அந்தோணியார் ஆலயத்தில் இருந்து, காரமடை மகதலா மரியா ஆலயம் வரை, பாவப் பரிகார பாதயாத்திரை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பவனியில் இயேசுவின் பாடுகளை நினைவு கூறும் வகையில், 14 இடங்களில் சிலுவை பாதை காட்சிகள் இடம் பெற்றன.
இதில் சிறுவர்கள், இளைஞர், இளம்பெண்கள் ஆகியோர் இடம் பெற்றனர். ஒவ்வொரு இடத்திலும் பாதிரியார் டேவிட் ஜான், சிலுவைப்பாதை ஜெபங்களை ஜெபித்தார். பங்கு பாதிரியார் பிலிப், பாவப்பரிகார பாதயாத்திரையை வழி நடத்தி சென்றார்.
மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில் இரவு, 10:00 மணிக்கு பவனி துவங்கியது. காரமடை மகதலா மரியா ஆலயத்துக்கு அதிகாலை, 4:30 மணிக்கு பவனி சென்றடைந்தது. அங்கு பாதிரியார் சிஜூ திருப்பலியை நிறைவேற்றினார்.

