/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிக்கு ஆதரவாக மக்கள் சப் - கலெக்டரிடம் புகார்
/
பள்ளிக்கு ஆதரவாக மக்கள் சப் - கலெக்டரிடம் புகார்
ADDED : ஏப் 13, 2025 03:21 AM

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சுவாமி சித்பவானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி, பூப்பெய்தியதால் அவரை தனிமைப்படுத்தி, முழு ஆண்டு தேர்வை எழுத வைத்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது.
இந்நிலையில், செங்குட்டுப்பாளையம் பகுதி மக்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்து, சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயகுமாரிடம் மனு கொடுத்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
சில நாட்களுக்கு முன், கிராமத்திலுள்ள பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் வந்த கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை.
இப்பள்ளியில், சமூக வேறுபாடின்றி குறைவான கட்டணத்தில் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒரு சிலர், ஒரு அமைப்பின் பெயரை பயன்படுத்தி, ஜாதி என்ற பெயரில் தவறாக சித்தரித்து, வன்முறையை துாண்டி பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுகின்றனர்.
மேலும், ஒரு சிலர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி, பள்ளியின் நற்பெயரை கெடுக்கும் வகையில் செயல் படுகின்றனர். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

