/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மஞ்சள் நிறத்துக்கு மாறிய பவானி ஆறு குடிநீராய் பயன்படுத்தும் மக்கள் அச்சம்
/
மஞ்சள் நிறத்துக்கு மாறிய பவானி ஆறு குடிநீராய் பயன்படுத்தும் மக்கள் அச்சம்
மஞ்சள் நிறத்துக்கு மாறிய பவானி ஆறு குடிநீராய் பயன்படுத்தும் மக்கள் அச்சம்
மஞ்சள் நிறத்துக்கு மாறிய பவானி ஆறு குடிநீராய் பயன்படுத்தும் மக்கள் அச்சம்
ADDED : மார் 27, 2025 11:30 PM

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே பவானி ஆறு மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. இந்த தண்ணீரை குடிநீராக வழங்குவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
சிறுமுகை அருகே உள்ள மூளையூரில் பவானி ஆற்றில் இருந்து, ஆறு ஊராட்சிகளின் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு, தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இந்த தண்ணீரை, காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னகள்ளிப்பட்டி, முடுதுறை, இரும்பொறை, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம், ஜடையம்பாளையம் ஆகிய ஆறு ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த மாதம் சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு பழையூரில் இருந்து, சிறுமுகை ராமர் கோயில் வரை, பவானி ஆற்றுத் தண்ணீர், கருப்பு நிறமாக மாறி இருந்தது. ரசாயன சாயக் கழிவு நீரால், ஆற்றுத் தண்ணீர் மாசு அடைந்துள்ளது என, ஆய்வு செய்த, மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சிறுமுகை விஸ்கோஸ் பம்பு ஹவுசில் இருந்து, மூளையூர் வரை பவானி ஆற்றுத் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. தண்ணீரின் மேல் பகுதியில் மஞ்சள் நிறத்தில் ஏதோ படிந்துள்ளது.
இந்த தண்ணீரை குடிநீர் வடிகால் வாரியம் எடுத்து, சம்பரவள்ளி அருகே கோவில் மேட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில், சுத்தம் செய்து ஆறு ஊராட்சிகளுக்கு குடிநீராக வழங்கி வருகிறது. இந்த தண்ணீரை குடித்தால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து பா.ஜ., பவானி நதிநீர் பாதுகாப்பு குழு தலைவர் சக்திவேல் கூறுகையில், ''பவானி ஆற்றுத் தண்ணீர், கடந்த ஒரு மாதமாக நிறம் மாறி மாசடைந்து வருகிறது. மாசடைந்த தண்ணீரை பம்பிங் செய்து, பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக வழங்கி வருகின்றனர். மாவட்ட கலெக்டர் சிறுமுகையில் பவானி ஆற்று தண்ணீரை ஆய்வு செய்து, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,'' என்றார்.
பவானி ஆற்றுத் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதை அறிந்து, கோவை மற்றும் திருப்பூரை சேர்ந்த மாசுக்கட்டுப்பாடு வாரிய பறக்கும் படை அதிகாரிகள் சிபிசக்கரவர்த்தி, கதிர்வேல், லாவண்யா ஆகியோர் சிறுமுகை அருகே பவானி ஆற்றை ஆய்வு செய்தனர். பின்பு பரிசோதனைக்கு தண்ணீரை எடுத்துச் சென்றுள்ளனர்.