/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜல்லிபட்டி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த மக்கள் எதிர்பார்ப்பு
/
ஜல்லிபட்டி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த மக்கள் எதிர்பார்ப்பு
ஜல்லிபட்டி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த மக்கள் எதிர்பார்ப்பு
ஜல்லிபட்டி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 18, 2024 12:34 AM
உடுமலை : மலைவாழ் மக்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மருத்துவ தேவைக்கு நம்பியுள்ள, ஜல்லிபட்டி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகளை கூடுதலாக்கி, மகப்பேறு மருத்துவம் உட்பட பிரிவுகளுடன் தரம் உயர்த்த வேண்டும்.
உடுமலை அருகே ஜல்லிபட்டியில், அரசு மருத்துவமனை, 1955ம் ஆண்டு துவக்கப்பட்டது. உடுமலை வனச்சரகம், ஈசல்திட்டு, திருமூர்த்திமலை உட்பட மலைவாழ் கிராம மக்களும், சுற்றுப்பகுதியைச்சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட கிராமத்தினரும் மருத்துவ தேவைக்காக இந்த மருத்துவமனையையே நம்பியுள்ளனர்.
நாள்தோறும், 300க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச்செல்கின்றனர். வளாகத்திலுள்ள சித்த மருத்துவ பிரிவுக்கும், நுாற்றுக்கும் அதிகமான வெளிநோயாளிகள் வருகின்றனர். இருப்பினும், போதியளவு டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை.
படுக்கை வசதி குறைவு
வனப்பகுதியில் இருந்து சிகிச்சைக்காக பல்வேறு இடையூறுகளை தாண்டி, ஈசல்திட்டு, குருமலை உட்பட மலைவாழ் கிராம மக்கள், ஜல்லிபட்டி அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
மருத்துவமனையில் தற்போது, 12 படுக்கை வசதி மட்டுமே உள்ளது. இதனால், காய்ச்சல் பாதிப்பு போன்ற நோய்த்தாக்குதல் அதிகம் இருக்கும் நேரங்களில் படுக்கை வசதி இல்லாமல், நோயாளிகள் பாதிக்கின்றனர்.
மகப்பேறு பிரிவு அவசியம்
அரசு மருத்துவமனையாக இருந்தாலும், மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு ஜல்லிபட்டியில் இல்லை. சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து பிரசவத்துக்காக வருபவர்கள், உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மலைவாழ் கிராமங்களில் இருந்து வரும் கர்ப்பிணிகள் தேவைக்காக, மகப்பேறு பிரிவு துவக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
பிரசவத்துக்காக வரும் கர்ப்பிணிகள், உடுமலைக்கு, 30 கி.மீ., க்கும் அதிகமாக பயணிக்க வேண்டியுள்ளது.
இதே போல் 108 ஆம்புலன்ஸ் வசதி இம்மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், அவசர சிகிச்சை பிரிவு இல்லை. விவசாயம் பிரதானமாக உள்ள இப்பகுதியில், பாம்பு கடித்தல் போன்ற அவசர சிகிச்சை தேவைப்படுவோர், வேறு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.
விபத்து போன்ற அவசர கால சிகிச்சை கிடைக்காமல், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
தரம் உயர்த்தணும்
ஜல்லிபட்டி அரசு மருத்துவமனையில், படுக்கை வசதிகளை அதிகரித்து, அவசர சிகிச்சை, மகப்பேறு, ரத்த பரிசோதனை ஆய்வகம், எக்ஸ்ரே, ஸ்கேன், குழந்தைகள் மருத்துவம் உட்பட பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும்.
கூடுதலாக டாக்டர்களை நியமித்து, 24 மணி நேர சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும். கிராமிய மருத்துவமனை பிரிவில் இருந்து தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தினால், சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராமத்தினரும், மலைவாழ் கிராம மக்களுக்கும் தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்கும்.
இது குறித்து, அப்பகுதி மக்கள் அனுப்பியுள்ள தொடர் கோரிக்கை மனுக்களை பரிசீலித்து, அரசு இந்தாண்டாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.