/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குவாரிக்கு அனுமதி வழங்க மக்கள் எதிர்ப்பு பாதிப்பை சுட்டிக்காட்டி மனு
/
குவாரிக்கு அனுமதி வழங்க மக்கள் எதிர்ப்பு பாதிப்பை சுட்டிக்காட்டி மனு
குவாரிக்கு அனுமதி வழங்க மக்கள் எதிர்ப்பு பாதிப்பை சுட்டிக்காட்டி மனு
குவாரிக்கு அனுமதி வழங்க மக்கள் எதிர்ப்பு பாதிப்பை சுட்டிக்காட்டி மனு
ADDED : அக் 23, 2025 11:06 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, பழனிக்கவுண்டனூரில் தனியார் இடத்தில் குவாரி அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பழனிக்கவுண்டனூரில் தனியார் சார்பில் கல்குவாரி துவங்க எதிர்ப்பு தெரிவித்து, கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார் தீபாவிடம் மக்கள் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
பழனிக்கவுண்டனூரில் விவசாயம் பிரதானமாக உள்ளது. இங்கு தென்னை மட்டுமின்றி, பயிர் வகைகள் ஆண்டு தோறும் பருவத்துக்கு ஏற்ப விவசாயம் நடக்கிறது. மேலும், இப்பகுதியில், இரு தடுப்பணைகள் இருப்பதால் எளிமையாக பாசன வசதி கிடைக்கிறது.
தற்போது, இப்பகுதியில் கனகசபாபதி என்பவர் கல்குவாரி துவங்க பணிகள் மேற்கொண்டு வருகிறார். இங்கு குவாரி அமைந்தால் இப்பகுதி மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதுடன், விவசாயம் பாதிப்படையும். நிலத்தடி நீர் மட்டம் குறையும். எனவே, இங்கு கல்குவாரி அமைக்க அரசு அனுமதி அளிக்கக்கூடாது.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கிணத்துக்கடவு தாலுகாவில் ஏற்கனவே பல குவாரிகள் இயங்கி வருகிறது. தற்போது மீண்டும் புதிதாக குவாரி துவங்க அனுமதி அளிக்கக்கூடாது. தற்போது குவாரி துவங்க அனுமதி கோரும் இடத்தின் சுற்றுப்பகுதி முழுவதும் தென்னை விவசாயம் அதிகம் உள்ளது.
குவாரி அமைக்கப்பட்டால், இப்பகுதியில் போக்குவரத்து அதிகரிப்பதுடன், அதிகபாரம் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளால் ரோடு பழுது, சுற்றுச்சுழல் பாதிப்பு, குவாரி புகை பெரும்பாலான விவசாயிகளின் விளை நிலங்களில் படிந்து பாதிக்கும். எனவே, இப்பகுதியில் குவாரி துவங்க அரசு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

