ADDED : டிச 09, 2024 08:18 AM

வால்பாறை : வால்பாறையில், ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ள மண் குவியலால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகரில் பல்வேறு இடங்களில், புதிதாக கட்டுமானப்பணிகள் நடக்கிறது. இந்நிலையில், இடிக்கப்பட்ட பழைய கட்டட கழிவுகளை, லாரியில் கொண்டு வந்து, பொள்ளாச்சி செல்லும் ரோட்டோரத்தில் கொட்டிவிடுகின்றனர். இதனால் ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் இதை கண்டு கொள்ளாததால், ரோட்டோரங்களில் விதிமுறை மீறி மண் உள்ளிட்ட கட்டட கழிவு குவிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வால்பாறையிலிருந்து பழைய வால்பாறை செல்லும் ரோட்டின் ஓரத்தில் மண் குவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் போது, அந்த மண் ரோட்டில் தேங்கி நிற்பதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்துள்ளாகும் அபாயம் உள்ளது. மேலும், மண் குவியலால், வாகனங்கள் ஒதுங்கி செல்ல முடியாமல் விபத்துள்ளாகின்றன.
பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகரில், சமீப காலமாக புதிதாக கட்டடங்கள் கட்டப்படுகின்றன. பழைய கட்டடக்கழிவுகளை லாரி வாயிலாக எடுத்துச்சென்று, நெடுஞ்சாலைத்துறை ரோட்டின் ஓரத்தில் கொட்டப்படுகிறது.
இதனால், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரத்திற்குள்ளாகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டோரங்களில் விதிமீறி கட்டடக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். கழிவு மண் கொட்டும் லாரியை பிடித்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.