/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமிக்கும் செடிகள்
/
நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமிக்கும் செடிகள்
ADDED : ஜன 17, 2026 05:28 AM

வால்பாறை: நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமிக்கும் செடிகளால், மலைப்பாதையில் வாகன விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை மலைப்பாதையில், வளைந்து நெளிந்து செல்லும் ரோடுகள் தான் அதிக அளவில் உள்ளன. குறிப்பாக ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான ரோட்டில், 40 கொண்டை ஊசி வளைவுகள் அமைந்துள்ளன.
இந்த ரோட்டில், நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன. இதே போல் வால்பாறையிலிருந்து சிறுகுன்றா கூழாங்கல் ஆறு வழியாக சின்னக்கல்லார் அருவிக்கும், சோலையாறு அணைக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாவாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில் இந்த ரோடுகளில் இருபுறமும் செடிகள் புதர்போல் காட்சியளிப்பதால், மலைப்பாதை ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன.
வாகன ஓட்டுனர்கள் கூறியதாவது:
'வால்பாறை மலைப்பாதையில், பகல் நேரத்திலேயே வன விலங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை ரோட்டின் இருபுறமும், செடிகள் காடு போல் முளைத்துள்ளதால், எதிரே வரும் வாகனங்களும், வன விலங்குகளும் தெரிவதில்லை.
இதனால் மலைப்பாதையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே வால்பாறை ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு செடிகளை, உடனடியாக அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

