/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளஸ் 2 தேர்வு; அதிகாரிகள் ஆலோசனை
/
பிளஸ் 2 தேர்வு; அதிகாரிகள் ஆலோசனை
ADDED : பிப் 27, 2026 07:10 AM
மார்ச் 2ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. தேர்வுக்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், வழித்தட அலுவலர், வினாத்தாள் கட்டுக்காப்பாளர், பறக்கும் படையினர் உள்ளிட்ட தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான ஆலோசனை கூட்டம், கே.செட்டிபாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள் அருள்ஜோதி (தாராபுரம்), சித்ரா (திருப்பூர்), மணிமாறன் (தனியார் பள்ளிகள்), தேர்வுகள் துறை மாவட்ட அலுவலகம் மணிவண்ணன், சர்வ சிக் ஷ அபியான் உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டத்துக்கான பொதுத்தேர்வு நடத்தும் அதிகாரி, தனியார் பள்ளிகள் இணை இயக்குனர் கணேசமூர்த்தி பேசியதாவது:
பொதுத்தேர்வு நடத்த ஒதுக்கப்பட்ட பணியை எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். தேர்வு நடத்தும் பணியில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்; ஏதேனும் புகார்கள் எழுந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு இன்று சென்று, ஆய்வு நடத்துங்கள். பாதுகாப்பு, குடிநீர், கழிப்பிட வசதி, தேர்வறை வசதிகளை பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளுங்கள். தேர்வறை கண்காணிப்பாளர், தேர்வு பணியில் ஈடுபடும் ஊழியர்களுடன் ஆலோசித்து தேர்வுக்கு தயாராகிக் கொள்ளுங்கள்.
வினாத்தாள் பிரிப்பு, மாணவ, மாணவியருக்கு வழங்குதல், விடைத்தாள் திரும்ப பெறுவது, சரியான நேரத்துக்கு 'பெல்' அடிப்பது உள்ளிட்டவற்றை உறுதி செய்து கொள்ள வேண்டும். இரு நாள் முன்பாகவே தயாராக வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
- நமது நிருபர் -:

