/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சரக்கு வாகனங்களால் நெரிசல்; கண்டுகொள்ளாத போலீசார்
/
சரக்கு வாகனங்களால் நெரிசல்; கண்டுகொள்ளாத போலீசார்
ADDED : செப் 14, 2025 10:57 PM

வால்பாறை; வால்பாறையில், சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில், பொள்ளாச்சி ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து, போஸ்ட் ஆபீஸ் வரையுள்ள ஒரு கி.மீ., துாரத்துக்கு, ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. இது தவிர, சுற்றுலா வாகனங்களும் ரோட்டில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில், சமீப காலமாக சரக்கு வாகனங்கள் பகல் நேரங்களில் நடுரோட்டில் நிறுத்தி, பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஏற்கனவே, போக்குவரத்து நெரிசல் நிலவும் நிலையில் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் செல்லும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண போலீசாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சுற்றுலா பயணியர் அதிகளவில் வரும் நிலையில், வால்பாறை நகரில் வாகனங்கள் நிறுத்த 'பார்க்கிங்' வசதி இல்லாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், நகராட்சி சார்பில் தனி 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும் என, சுற்றுலா பயணியர் வலியுறுத்தினர்.