/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒதுக்குப்புறமான இடங்களிலும் போலீஸ் தீவிர ரோந்து! கல்லுாரி மாணவி பலாத்காரம் எதிரொலி
/
ஒதுக்குப்புறமான இடங்களிலும் போலீஸ் தீவிர ரோந்து! கல்லுாரி மாணவி பலாத்காரம் எதிரொலி
ஒதுக்குப்புறமான இடங்களிலும் போலீஸ் தீவிர ரோந்து! கல்லுாரி மாணவி பலாத்காரம் எதிரொலி
ஒதுக்குப்புறமான இடங்களிலும் போலீஸ் தீவிர ரோந்து! கல்லுாரி மாணவி பலாத்காரம் எதிரொலி
ADDED : நவ 05, 2025 12:01 AM

கோவை: கோவை கல்லுாரி மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில், போலீசார் முறையாக ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தால், குற்றத்தை தடுத்திருக்கலாம் என்பதே, பொதுமக்களின் பரவலான கருத்தாக உள்ளது. ஆகவே, இனியாவது ஆளரவமற்ற பகுதிகளிலும், இரவு ரோந்து பணியில் போலீசார் முழு வீச்சில் ஈடுபட வேண்டும்.
குற்றங்களைத் தடுக்க, போலீசார் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்து செல்கின்றனர். அதிக குற்றச்சம்பவங்கள் நடக்கும் இடங்களில், குற்றங்கள் நடக்காமல் தடுப்பதே இவர்களின் பணி. இவர்கள், 'பீட்' போலீசார் என அழைக்கப்படுகின்றனர்.
கோவை மாநகரில், 59 பீட்கள் உள்ளன. ஒரு பீட்டுக்கு இரு போலீசார் உள்ளனர். இதுதவிர, 20 'பேட்ரோல்கள்', இரு 'ஹைவே' பேட்ரோல்கள் செயல்பட்டு வருகின்றன. இதேபோல், ஒவ்வொரு மாவட்ட, மாநகர போலீசிலும் பேட்ரோல்கள் இயங்கி வருகின்றன.
ஆனால், சமீபகாலமாக போலீசார் ரோந்து பணிகளுக்கு செல்வதற்கு தயக்கம் காட்டுவது வெளிப்படையாக தெரிந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் குற்றச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்கு சாட்சி.
போலீசார் தங்களின், உயிர், உடமைகளுக்கு சேதம் ஏற்படும் என்ற அச்சத்தால், ரோந்து பணிகளை பெயரளவுக்கே மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கல்லுாரி மாணவி பாலியல் பலாத்கார விவகாரத்திலும், குற்றம் நடந்த காலியிடத்துக்கு ரோந்து போலீசார் சென்றிருந்தால், கார் நின்றிருந்தது தெரிந்திருக்கும். இப்பகுதியில் கஞ்சா விற்பனை, மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ரோந்து சென்றிருந்தால் போதை பொருள் விற்பனை மற்றும் குற்றத்தை தடுத்திருக்கலாம்' என்றனர்.
இது குறித்து, போலீஸ் உயர் அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
அனைத்து பகுதிகளிலும், ரோந்து பணிகள் முறையாக நடக்கின்றன. பீட் அலுவலர்கள், அந்தந்த பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் ரோந்து பணி மேற்கொள்கின்றனர். அவர்களை கண்காணிக்க, வாகனங்களில் ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டுள்ளது.
அதன் மூலம் குறிப்பிட்ட பீட் போலீசார், இரவில் எந்தெந்த பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர் என்பது தெரியும். எவ்வளவு நேரம் ரோந்து சென்றனர், குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு நேரம் இருந்தனர் உள்ளிட்ட, அனைத்து விவரங்களும் தெரியும்.
மறுநாள் காலை இத்தகவல், சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதன் அடிப்படையில், போலீசார் ஏதாவது ஒரு பகுதிக்கு செல்லாமல் இருந்தால், அதுகுறித்து கேள்வி எழுப்பப்படும். தமிழகம் முழுவதும் இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

