கடன் தொல்லையால் ஆசிரியை தற்கொலை
பொள்ளாச்சி, வடுகபாளையம் செல்லக்குமார் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரி, 46. இவர், வெங்கட்ரமணன் வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் வெற்றிவேல் எலக்ட்ரீசியனாக உள்ளார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
நேற்று மதியம், பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஆசிரியை, வீட்டினுள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் கொடுத்த தகவலின் பேரில், மேற்கு போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். கடன் பிரச்னையால் ஆசிரியை தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தொழிலாளி மரணம்: போலீசார் விசாரணை
ஆனைமலை அருகே கணபதிபாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து,51; கூலித்தொழிலாளி. இவருக்கு, மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்றுமுன்தினம் மாரிமுத்து வழக்கம் போல மாடு மேய்க்க சென்றார். மாலையில், பக்கத்துவீட்டில் வசிக்கும் கருப்புசாமி என்பவர், மாரிமுத்து மனைவி சுகந்திக்கு போன் செய்து, மாடுகள் மட்டும் வீட்டுக்கு வந்ததாகவும், மாரிமுத்து வரவில்லை என தெரிவித்தார்.
கணவரை தேடிய போது, வீட்டின் பின்னால் உள்ள தனியார் சைட்டில் தலையில் அடிபட்டு இறந்து கிடந்தார். அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், மாரிமுத்து இறந்து விட்டதாக கூறினர்.
கணவருக்கு கண் குறைபாடு உள்ளதாகவும், மாடு மேய்க்கும் போது கயிறு காலில் சிக்கி இழுத்துச் சென்று தலையில் அடிபட்டு இறந்திருக்கலாம் என போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வீட்டினுள் துாக்கிட்டு பெயின்டர் தற்கொலை
ஆனைமலை அருகே, ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் அல்லாபிச்சை,24; கூலித்தொழிலாளி. இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த, 2ம் தேதி அல்லாபிச்சையின் பெற்றோர் அருப்புக்கோட்டை சென்றனர். கடந்த, 5ம் தேதி பெற்றோர், அல்லாபிச்சையை பணம் அனுப்ப கூறியுள்ளனர். அவரும், 2,000 ரூபாய் அனுப்பியதாக மொபைல்போன் வாயிலாக தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் அருப்புக்கோட்டையில் இருந்து வீட்டுக்கு வந்த பெற்றோர், கதவை திறக்க முயற்சித்தும் இயலவில்லை. அருகில் வசிப்போர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது, துாக்கிட்டு அல்லாபிச்சை தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து, கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பைக் மோதி விபத்து: பாதசாரி படுகாயம்
கிணத்துக்கடவை சேர்ந்தவர் பாலதண்டபாணி, 63. இவர், மருந்து வாங்க சர்வீஸ் ரோட்டை கடக்கும் போது கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அடையாளம் தெரியாத பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காயம் அடைந்த பாலதண்டபாணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் வாயிலாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய பைக் குறித்து விசாரிக்கின்றனர்.