/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
/
விடுதி உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
ADDED : டிச 31, 2025 07:49 AM

வால்பாறை: புத்தாண்டு கொண்டாட்டத்தில், விதிமுறையை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை (1ம் தேதி) புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து இன்று (31ம் தேதி) இரவு புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட, வால்பாறையில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலாபயணியர் அதிக அளவில் திரண்டுள்ளனர்.
புத்தாண்டு தினத்தை அமைதியான முறையில் கொண்டாடும் வகையில், தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் நடந்தது. சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வரவேற்றார்.
கூட்டத்தில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மத்தியில் போலீசார் பேசியதாவது:
புத்தாண்டு கொண்டாட்டத்தை சுற்றுலாபயணியர் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். பெரும்பாலான தங்கும் விடுதிகள் குடியிருப்பு பகுதியை ஒட்டி உள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு, எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டும்.
முறையான ஆவணங்கள் இல்லாமல், சுற்றுலாபயணிரை விடுதியில் தங்க அனுமதிக்கக்கூடாது.இரவு, 12:00 மணிக்கு மேல் ரோட்டில் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை.
மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கினால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் அமைதியான முறையில் புத்தாண்டை சுற்றுலாபயணியரும், உள்ளூர் மக்களும் கொண்டாட வேண்டும்.
போலீசாரின் உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.

