/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வினியோகம் கடைகளில் கூட்டம் இல்லாததால் நிம்மதி
/
பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வினியோகம் கடைகளில் கூட்டம் இல்லாததால் நிம்மதி
பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வினியோகம் கடைகளில் கூட்டம் இல்லாததால் நிம்மதி
பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வினியோகம் கடைகளில் கூட்டம் இல்லாததால் நிம்மதி
ADDED : ஜன 09, 2025 11:35 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் நேற்று துவங்கியது.
தமிழக அரசு, ரேஷன் கடைகளில் அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை முகாம் வாசிகளுக்கு பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவித்தது. அவ்வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ஆகியன வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்காக, பயனாளிகளுக்கு வரிசைப்படி 'டோக்கன்' வழங்கி, அதன்பேரில் இப்பரிசு பொருள் வழங்க திட்டமிடப்பட்டது. அவ்வகையில், பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில், ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாக 'டோக்கன்' வழங்கப்பட்டன.
இதன் வாயிலாக, பொள்ளாச்சியில், 145 ரேஷன் கடைகளில், 93,100 ரேஷன் கார்டுதாரர்கள், ஆனைமலையில், 101 ரேஷன் கடைகளில், 62,042 ரேஷன் கார்டுதாரர்கள், வால்பாறையில், 43 ரேஷன் கடைகளில், 15,600 கார்டுதாரர்கள், கிணத்துக்கடவு பகுதியில், 58 ரேஷன் கடைகளில் 33,900 கார்டுதாரர்கள் பயன்பெறவும் உள்ளனர்.
நேற்று முதல், அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி துவங்கியது. ஒவ்வொரு கடையிலும், தினமும், 200 பேருக்கு வினியோகிக்கப்படுகிறது. மக்கள் கடைக்குச் சென்று, பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிச் சென்றனர். பெரும்பாலான கடைகளில், கூட்டம் இல்லை.
குடிமைப் பொருள் அதிகாரிகள் கூறியதாவது:
ரேஷன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் பொருள் வழங்குவதில் ஏற்படும் குளறுபடிகள் தவிர்க்க டோக்கன் வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த, 3ம் தேதி முதல் ரேஷன் கடைவாரியாக, கார்டுதாரர்களுக்கு கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கினர். நேற்று முதல், பொங்கல் பரிசு பொருள் வினியோகம் துவங்கியது. இவ்வாறு, கூறினர்.
வால்பாறை
வால்பாறை தாலுகாவில் மொத்தம், 15,250 ரேஷன் கார்டுகளுக்கு, 47 ரேஷன் கடைகள் வாயிலாக இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளன. இதனை தொடர்ந்து வால்பாறை தாலுகாவில் கடந்த வாரம் டோக்கன் வழங்கும் பணி துவங்கியது.
இந்நிலையில், நேற்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல்தொகுப்பு வழங்கப்பட்டது. வால்பாறை நகரில் உள்ள ரேஷன் கடைகளில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி கலந்து கொண்டு, பொங்கல் தொகுப்பினை வழங்கினார்.
வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் கூறுகையில், ''வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், 13ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது,'' என்றார்.
உடுமலை
உடுமலை தாலுகாவில், ஒரு லட்சத்து, 8 ஆயிரத்து, 465 ரேஷன் கார்டுகளுக்கு, 182 ரேஷன் கடைகள் வாயிலாக, பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நேற்று துவங்கியது. முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட்டு, வரிசைப்படி பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
முதல் நாளான நேற்று, உடுமலை தாலுகாவில், 25 ஆயிரத்து, 465 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
அதே போல், மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, 63 ரேஷன் கடைகளில், 37 ஆயிரத்து, 249 அரிசி ரேஷன் கார்டுகள் உள்ளன. முதல் நாளான நேற்று, 7 ஆயிரத்து, 444 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

