பிரமாண்டமாக உருவாகிறது... போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன்
பிரமாண்டமாக உருவாகிறது... போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன்
ADDED : மார் 19, 2026 05:41 AM

கோவை: போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளரூ.8.5 கோடிக்கான டெண்டர் அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கோவை ரயில்வே ஸ்டேஷனில் நிலவும் இடநெருக்கடியை சமாளிக்க அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், போத்தனுார், வடகோவை ரயில்வே ஸ்டேஷனில், மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாட்டு பணிக்கு மட்டும் மத்திய அரசு ரூ.100 கோடி வரை ஒதுக்கியுள்ளது. பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
தற்போது ரயில்வே திருமண மண்டபம், ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரயில்வே நிர்வாகம் ரூ.8.5 கோடிக்கான ஒப்பந்தபுள்ளியை ரயில்வே நிர்வாகம் கோரியுள்ளது.
கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் ஆலோசனை குழு உறுப்பினர் சுப்பிரமணியன் கூறியதாவது: போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் கட்டமைப்பு பணிகளை படிப்படியாக செய்ய தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. அதற்காக எலக்ட்ரிக் ரயில் இன்ஜின்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்வதற்கான, அதிநவீன ரயில்வே ஆய்வு மையம் அமைக்கப்படுகிறது.
இதற்காக 65க்கு 15 மீ., அளவில் பிரம்மாண்ட கட்டடம் கட்டப்படுகிறது. ரயில்வே துறைக்கு சொந்தமான கல்யாண மண்டபம் புதுப்பிக்கப்பட உள்ளது. போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில், சர்வீஸ் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இரண்டாவது ரயில் முனையமாக மாற்றுவதற்கான அனைத்து கட்டமைப்பு பணிகளும் ஒவ்வொன்றாக நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
