/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாராட்டு! அவசர சிகிச்சைக்கு அபார உதவி
/
ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாராட்டு! அவசர சிகிச்சைக்கு அபார உதவி
ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாராட்டு! அவசர சிகிச்சைக்கு அபார உதவி
ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாராட்டு! அவசர சிகிச்சைக்கு அபார உதவி
ADDED : நவ 14, 2025 10:56 PM

கோவை: கேரளாவில் விபத்தில் சிக்கிய முதியவரை, போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், கோவை மருத்துவமனையில் விரைந்து கொண்டு வந்து சேர்க்க, கோவை ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 'எஸ்கார்ட்' அமைத்து உதவினர். இவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த 75 வயது முதியவர், அங்குள்ள தொழிற்சாலையில் நேற்று பணியாற்றிய போது, கண்ணில் இரும்பு ராடு தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
அங்குள்ள மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக, முதியவரை கோவையிலுள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லபரிந்துரைத்தனர். கோழிக்கோட்டிலிருந்து முதியவரை ஏற்றிக் கொண்டு, கோவை நோக்கி ஆம்புலன்ஸ் புறப்பட்டது. இந்த தகவல், அவசர காலத்தில் உதவ தமிழக ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உருவாக்கியுள்ள, 'எமர்ஜென்சி எஸ்கார்ட்' என்ற வாட்ஸ் ஆப் குழுவில் பகிரப்பட்டது.
வாளையாறு வழியாக ஆம்புலன்ஸ் வரும் தகவலை அறிந்த, கோவையை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சதீஷ், பிரபாத், மணி, மதுரை வீரன், சந்தானம், பூபதிராஜா, சதா ஆகியோர்,கேரள முதியவர் பத்திரமாக மருத்துவமனையை வந்தடைய, உதவுவதென முடிவு செய்தனர்.
நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் வாளையாறிலிருந்து முன்னும், பின்னும் சென்று வழி ஏற்படுத்தி, கேரள ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்வதற்கு உதவினர். போக்குவரத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்களும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
185 கி.மீ. துாரத்தை, இரண்டரை மணி நேரத்தில் கடந்து, முதியவரைகுறித்த நேரத்தில் அரவிந்த் கண் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல், கேரளாவிலிருந்து வந்த ஒரு வயது முதிர்ந்த தொழிலாளிக்கு, ஆம்புலன்ஸ் வாகனங்களால் 'எஸ்கார்ட்' வழங்கி உதவிய, கோவை ஆம்புலன்ஸ் டிரைவர்களை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

