ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு
ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு
UPDATED : மார் 02, 2026 06:37 AM
ADDED : மார் 02, 2026 05:56 AM

அன்னுார்: 'பேச்சுவார்த்தையில் அரசு ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், போராட்டம் நடத்துவோம்,' என, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டம் கோவை மாவட்டம், அன்னுாரில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். கூட்ட முடிவில் மாநில பொதுச்செயலாளர் மயில் நிருபர்களிடம் கூறியதாவது :
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது 50 ஆண்டுகளாக துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் உயர்கல்வி தகுதிக்கு பெற்று வந்த ஊதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் வழங்க வேண்டும்.
தொகுப்பூதிய ஆசிரியர்களின் பணிக்காலத்தை நியமன நாள் முதல் முறைப்படுத்த வேண்டும். துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தணிக்கை தடைகளை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையில் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால் அரசாணை வெளியிடப்படவில்லை.
அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், வரும் 8ம் தேதி எட்டயபுரத்தில் நடைபெறும் மாநில மாநாட்டில் போராட்டப் பிரகடனம் வெளியிட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மாநில பொருளாளர் கணேசன், துணைப் பொதுச் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் பழைய பென்ஷன் திட்டத்திற்கு இணையானது இல்லை. எனவே, ஊழியர்களிடம் 10 சதவீதம் பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும்.
கடந்த இரண்டு ஊதிய குழுக்களில் ஊதிய நிலையில் அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை கலைந்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

