ADDED : ஆக 10, 2025 10:27 PM
சூலுார்:
சூலுார் அருகே வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சூலுார் அடுத்த கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராம், 34. ஐ.டி., நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, சுற்றுச்சுவரை தாண்டி மர்ம நபர் குதித்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். சி.சி.டி.வி., யை பார்த்தபோது, மர்ம நபர் கதவை திறக்க முயற்சி செய்வது தெரிந்தது. தனது தம்பியுடன் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தார்.
இதைக்கண்ட மர்ம நபர் தப்பி ஓடினார். இருவரும் துரத்தி சென்று அந்நபரை பிடித்து, சூலுார் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற போலீசார், வாலிபரை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். விசாரணையில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த திவாஷ் சர்தார்,28, என்பதும், அதே பகுதியில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரிந்தது. இதையடுத்து, அந்நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.