ADDED : செப் 10, 2026 04:31 AM
வால்பாறை: தீ விபத்தில் வீடு சேதமான நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அ.தி.மு.க., தொழிற்சங்கத்தின் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
வால்பாறை அடுத்துள்ளது அப்பர்பாரளை எஸ்டேட். இங்கு தொழிலாளியாக வேலை செய்யும் ராமர் என்பவரின் வீட்டில், அனைவரும் பணிக்கு சென்ற நிலையில் திடீர் மின் கசிவினால் வீடு தீயில் கருகியது.
இதனால், வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதமடைந்தன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் அமீது, உணவு பொருட்களையும், உதவித்தொகையும் வழங்கினார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எஸ்டேட் நிர்வாத்துடன் பேசி தேவையான உதவிகளை செய்து தரவும் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க.,அவைத்தலைவர் பாலு,எம்.ஜி.ஆர்.,மன்ற இணை செயலாளர் சாய்கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
