ADDED : மார் 22, 2026 05:04 PM
வால்பாறை: வால்பாறை நகரில், இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் காமராஜ்நகர் வரையிலும், சாலையோரங்களின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளன.
இது தவிர, சுற்றுலா வாகனங்களும் அதிகளவில் சாலையோரம் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் தங்களது இருசக்கர வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்திச்செல்வதால், மக்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
வால்பாறை நகரில் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதாலும், நெடுஞ்சாலைத்துறை ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளாலும், நாள் தோறும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள், சாலையோரம் நடந்து செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூாக உள்ள ஆக்கிரிமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
