ADDED : டிச 16, 2024 10:16 PM
அன்னுார்; 'கறவை மாட்டின் மடியை கிருமி நாசினி கொண்டு கழுவிய பின் கறக்க வேண்டும்,' என முகாமில் தெரிவிக்கப்பட்டது.
அன்னுார் பேரூராட்சியில், 1,200 மாடுகள் உள்ளன. மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நேற்று துவங்கியது. செல்லனுாரில் நடந்த முகாமில் 100 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது,
முகாமில் டாக்டர் சரவணன் பேசுகையில், கோமாரி நோய் தடுப்பு ஊசியை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாடுகளுக்கு போட வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து தர வேண்டும்.
மாட்டு தொழுவத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
கறவை மாட்டில் பால் கறக்கும் போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கறவை மாட்டின் மடியை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாட்டை கறந்த பின்பும் கைகளை கழுவிய பின்பு அடுத்த மாட்டின் மடியில் கறக்க வேண்டும், என்றார்.
'பேரூராட்சியில், தினமும் 100 மாடுகளுக்கு என 12 நாட்கள் முகாம் நடைபெறும்,' என கால்நடை துறையினர் தெரிவித்தனர்.
இதேபோல், கணேச புரம், பொன்னே கவுண்டன்புதூர், எல்.கோவில் பாளையம், பொகலூர் மற்றும் அல்லப்பாளையம் கால்நடை மருந்தகங்களில் தடுப்பூசி முகாம் நேற்று துவங்கியது.
'கால்நடை வளர்ப்போர், அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் தங்களது மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளலாம்,' என கால்நடை பராமரிப்பு துறையினர் தெரிவித்தனர்.

