/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே தொடர்பான கோரிக்கைகள் நிறைவேறும்! உறுதியளித்த கோட்ட மேலாளர்
/
ரயில்வே தொடர்பான கோரிக்கைகள் நிறைவேறும்! உறுதியளித்த கோட்ட மேலாளர்
ரயில்வே தொடர்பான கோரிக்கைகள் நிறைவேறும்! உறுதியளித்த கோட்ட மேலாளர்
ரயில்வே தொடர்பான கோரிக்கைகள் நிறைவேறும்! உறுதியளித்த கோட்ட மேலாளர்
ADDED : ஜூன் 01, 2025 11:13 PM

பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன்களில், ரயில் பெட்டிக்கு தண்ணீர் நிரப்பும் கட்டமைப்பு, ரயில்வே பராமரிப்பு வசதிகள் அமைக்க வேண்டும்,' என, பாலக்காடு கோட்ட மேலாளரிடம் வலியுறுத்தப்பட்டது.
பாலக்காடு ரயில்வே கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமையில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை ரோடு, கோவில்பாளையம் ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தினர்.
ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:
மத்திய அரசின், அம்ரித் பாரத் திட்டத்தில் பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன், நவீன வசதிகளுடன், ரூபாய் 13 கோடி செலவில் கட்டமைப்பு ஏற்படுத்தி வரும் ரயில்வே துறைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 11ம் தேதி முதல், சென்னை -- பொள்ளாச்சி - - பாலக்காடு ரயிலை வேகப்படுத்தி, 17 நிமிடங்கள் முன்பாக பொள்ளாச்சிக்கு வந்து சேரும்படி செய்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 11ம் தேதி முதல், பொள்ளாச்சி -- கோவை காலை நேர ரயிலை வேகப்படுத்தி, 30 நிமிடங்கள் முன்பாக கோவைக்கு காலை 8:55 மணிக்கு சென்றடையும் வகையிலும், பாலக்காடு - - திருச்செந்துார் ரயில் மற்றும் சென்னை -- பாலக்காடு ரயிலில் வரும் பயணியர் பொள்ளாச்சி வந்தடைந்து, கோவை செல்வதற்கு வசதியாக, பொள்ளாச்சி -- கோவை ரயில் நேரத்தை காலை, 7:50 மணிக்கு மாற்றியது பயனாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணி செய்பவர்களின் வசதிக்கு, பொள்ளாச்சி -- கோவை ரயிலை மேலும், 10 நிமிடங்கள் வேகப்படுத்தி கோவைக்கு 8:45 மணிக்கு சென்றடையும் வகையில் மாற்றி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
பெங்களூரு --- கோவை உதய் டபுள்டெக்கர் ரயிலை, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை நீட்டிக்க வேண்டும். திருச்செந்துார் -பாலக்காடு ரயிலில் வரும் கிணத்துக்கடவு, போத்தனுார், கோவை செல்லும் பயணியரின் வசதிக்கும், பொள்ளாச்சி பகுதி மக்கள்; கோவையிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு செல்லும் ரயில்களில் பயணம் செய்ய, பொள்ளாச்சி- -- கோவை ரயிலை, இரவு, 8:15 மணிக்கு இயக்கி, கோவைக்கு ஒரு மணி நேரத்தில் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி - சென்னை இடையே, கிணத்துக்கடவு, ஈரோடு, சேலம் வழியாக தினசரி ரயில் இயக்க வேண்டும். பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், ரயில் பெட்டிக்கு தண்ணீர் நிரப்பும் கட்டமைப்பு, ரயில்வே பராமரிப்பு வசதிகள் (பிட் லைன்) அமைக்க வேண்டும்.
கோவில்பாளையம் ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அங்கு தற்காலிகமாக ரயில் நிறுத்தம் செய்ய வேண்டும். கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் நடைமேடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும்.
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் அல்லது கிணத்துக்கடவு தபால் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு மையம் அமைக்க வேண்டும். எர்ணாகுளம் - பாலக்காடு மெமு பயணியர் ரயிலை 'ஆனைமலை ரோடு' ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி, பொள்ளாச்சி வரை இயக்க வேண்டும்.
பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் பாலக்காடு -- சென்னை, சென்னை-பாலக்காடு ரயிலை, ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கைகளை கேட்ட ரயில்வே மேலாளர் உரிய நடவடிக்கை எடுத்து, நிறைவேற்ற முயற்சி எடுப்பதாக உறுதியளித்தார்.
இவ்வாறு, கூறினர்.