/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உச்சகட்ட பிரசாரத்தில் ரயில்வே தொழிற்சங்கங்கள்
/
உச்சகட்ட பிரசாரத்தில் ரயில்வே தொழிற்சங்கங்கள்
ADDED : நவ 27, 2024 10:12 PM
கோவை; அங்கீகாரத்தை பெற ரயில்வே தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களிடம் உச்சகட்ட பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
இந்திய ரயில்வேயில், அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும். கொரோனா தொற்றால், 2019க்கு பின், இத்தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.
பல்வேறு முயற்சிகளுக்கு பின், தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தொழிற்சங்கங்களும் ஆதரவு திரட்ட ஆரம்பித்து விட்டன. வரும் டிச., 4 முதல், 6 வரை ரகசிய ஒட்டுப்பதிவு நடத்தப்பட்டு, டிச., 12ல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தெற்கு ரயில்வேயில், தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன்(எஸ்.ஆர்.எம்.யு.,), தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம்(டி.ஆர்.இ.யு.,), தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம்( எஸ்.ஆர்.இ.எஸ்.,), தக்சின் ரயில்வே கார்மிக் சங்கம்(டி.ஆர்.கே.எஸ்.,), ரயில் மஸ்துார் யூனியன்(ஆர்.எம்.யு.,) ஆகிய ஐந்து தொழிற்சங்கங்கள் அங்கீகாரத்தை பெற, போட்டி போடுகின்றன. தொழிற்சங்கத்தினர், ரயில்வே ஊழியர்களின் ஆதரவை பெற தங்களின் கடந்த கால சாதனைகளை சொல்லி ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
சேலம் கோட்டத்தில், கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகள் உள்ளன. சேலம் கோட்டத்தில் கோவை மற்றும் போத்தனுார் எஸ் அண்ட் டி பணிமனை ஆகியவற்றில் தொழிற்சங்கங்கள் மிகவும் செல்வாக்குடன் இருந்து வருகின்றன.
சேலம் கோட்டத்தில் மொத்தம், 8,583 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டளிக்க வசதியாக, கோட்டத்தின், 14 இடங்களில் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இந்த இடங்களில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட உள்ளன.
ஓட்டுச்சீட்டு முறையிலேயே ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. மறைமுகத் ஓட்டுப்பதிவு என்பதால், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் எண்ணங்களை அறிய தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.