ADDED : அக் 23, 2024 10:33 PM
அன்னுார்: கோரிக்கையை வலியுறுத்தி, கோவை மாவட்டத்தில் பெரும்பாலான கூட்டுறவு கடன் சங்கங்களும், ரேஷன் கடைகளும் மூன்றாவது நாளாக நேற்றும் மூடப்பட்டன.
ரேஷன் கடைகளில் பொருட்களின் இருப்பு குறைவு அல்லது அதிகம் இருப்பது கண்டறியப்பட்டால் வசூலிக்கும் அபராதம் இரு மடங்காக உயர்த்தியதைதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வதாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவித்தது.
இதன்படி அன்னுார் வட்டாரத்தில் உள்ள 17 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும், அவை நடத்தும் ரேஷன் கடைகளும் மூன்றாவது நாளாக நேற்றும் மூடப்பட்டன. ரேஷன் பொருட்கள் வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வேளாண் சங்கத்திற்கு வந்த விவசாயிகளும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

