/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊக்கத்தொகை வேண்டும் ரேஷன் ஊழியர்கள் மனு
/
ஊக்கத்தொகை வேண்டும் ரேஷன் ஊழியர்கள் மனு
ADDED : ஜன 13, 2026 06:14 AM
-- நமது நிருபர் -:
பொங்கல் பரிசு தொகை மற்றும் பொருட்கள் வழங்கிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு, ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில், தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் வாயிலாக, அரசு திட்டமான பொங்கல் பரிசு தொகை மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. காலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை ஊழியர்கள் இதை மேற்கொண்டனர். இதற்காக வீடு தேடிச் சென்று டோக்கன் வழங்கி, காலை மற்றும் மாலை இரு வேளையும் தலா 100 பேர் என்ற அளவில், ஓய்வில்லாமல் பொருட்கள் வழங்கினர். பெண் ஊழியர்கள், மாற்றுத்திறனாளி பணியாளர்கள் பலரும் எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாமல் இதில் ஈடுபட்டனர்.
பயனாளிகள் ரேகை பதிவாகாமல் ஏற்பட்ட அவதி உள்ளிட்டவற்றையும் சமாளித்து, எந்த பிரச்னையும் இன்றி இப்பணி நடந்துள்ளது. இப்பணிக்கு உதவிக்கு கூட யாரையும் அமர்த்திக் கொள்ளவில்லை.
அரசு திட்டத்தை முறையாக மக்களிடம் கொண்டு சேர்த்த ரேஷன் ஊழியர்களுக்கு, கார்டு ஒன்றுக்கு தலா 5 ரூபாய் ஊக்கத்தொகை அல்லது ஊழியருக்கு 5 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

