ADDED : செப் 22, 2024 11:56 PM
ஆளுங்கட்சி பிரமுகரின் 'டீல்' எப்புடீ!
பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டானாவுல வாக்கிங் சென்ற நண்பர், ஆளுங்கட்சி விஷயம் தெரியுமானு கேட்டு, சொல்ல ஆரம்பித்தார்.
சமீபத்துல நகராட்சியில, லே -- அவுட் சம்பந்தமா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினாங்க. அதுல, ஒரு லே -- அவுட் காரங்ககிட்ட, ஆளுங்கட்சி பிரமுகர் ஒருத்தரு, தீர்மானம் எல்லாம் போட்டு தர்றோம்; அதுக்கு கைமாறாக என்ன பண்ணுவீங்கனு கேட்டிருக்காரு. அவங்க, எப்பவும் போல, கவனிச்சர்லாம்னு சொல்லி இருக்காங்க.
'ஒரு ஏக்கர் மட்டுமே எனக்கு ஒதுக்கிருங்கனு' சொல்லியிருக்காரு. இத கேட்டு, லே-அவுட்காரங்க ஆடிப்போயிட்டாங்களாம். லே -- அவுட் போட்ட பார்ட்னர்ல ஒருத்தரு, இடம் எல்லாம் கொடுக்க வேண்டாம்; விவசாய நிலமாகவே விட்டுடலாம்னு சொல்லியிருக்காரு. பார்ட்டனர்ஸ் எல்லாரும் ஆலோசிச்சு, ஆளுங்கட்சிக்காரங்கள பகைச்சுட்டு நாம பிசினஸ் பண்ண முடியாது. 75 சென்ட் இடம் வேணும்னா கொடுக்கறோம்னு சொல்லி இருக்காங்க.
அதுக்கு, ஆளுங்கட்சி பிரமுகரும் 'ஓகே' சொல்லிட்டாராம். இடத்த வாங்கின விலைக்கே கொடுக்க போறாங்களா, இல்ல, கிப்டா கொடுக்க போறாங்களானு தெரியல. இத பத்தி தான், ஆளுங்கட்சியில ட்ரெண்டிங்கா பேசிக்கிட்டு இருக்காங்க. அவர தவிர யாராலும் இப்படியெல்லாம் யோசிக்கவே முடியாதுனு, விஷயத்தை சொல்லி முடித்தார்.
ரிசர்வ் சைட்டையும் வித்துட்டாங்களே!
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாப்ல நண்பரை சந்திக்க போயிருந்தேன். அங்கு வந்த நண்பர், லே-அவுட்ல இடம் வாங்கறது பற்றி போனில் பேசிக்கொண்டிருந்தார்.
கிணத்துக்கடவு பகுதியில இருக்கற ஒரு தனியார் லே-அவுட்டுல, 2003ம் ஆண்டுல, ரிசர்வ் சைட்டை, பஞ்சாயத்து வசம் ஒப்படைச்சாங்க. அப்புறம், 2011ல, கோவையை சேர்ந்த ஒருவருக்கு அந்த இடத்தை வித்து, பத்திரப்பதிவு பண்ணி கொடுத்துட்டாங்க.
அதுக்கப்புறம், 2023 செப்., மாதம், இந்த இடத்தில் புதுசா ரேஷன் கடை கட்டும் பணி நடந்துச்சு. அப்போ இந்த இடத்த கிரயம் பெற்றவர், இது எங்க இடம்னு சொல்லியிருக்காங்க. 'உங்க இடத்துக்கு பாதிப்பு இல்லாம, ரேஷன் கடைய தள்ளி கட்டுறோம்னு,' சொல்லியிருக்காங்க. இதை நம்பி அவங்களும் போய்டாங்க. இப்போ, அந்த இடத்தின் ஓனரோட இடத்துல, ஒரு சென்ட் இடத்த ஆக்கிரமிச்சு ரேஷன் கடை கட்டடம் கட்டியிருக்காங்க.
இது என்னோட இடமுன்னு இடத்துக்காரரும், இல்லை... இது பஞ்சாயத்து இடம்னு ஊராட்சி நிர்வாகமும் மல்லுக்கட்டிட்டு இருக்காங்க. ஆக மொத்தத்துல, ஊராட்சிக்கு ஒப்படைச்ச இடத்த முறைகேடா வித்திருக்காங்கனு தெரியுது.
இப்ப இந்த பிரச்னைக்கு எந்த தீர்வும் கிடைக்காததால, ரெண்டு தரப்பும் அலைமோதுறாங்க. இதுக்குத்தான், லே-அவுட்ல இடம் வாங்கும் போது, சைட் அப்ரூவல் வரைபடத்தை பார்த்து, நல்லா விசாரிச்சு வாங்கணும்னு, 'அட்வைஸ்' செய்தார். அவரிடம் விடை பெற்று, நானும் கிளம்பினேன்.
கிராமத்துல பூட்டிக்கிடக்குது லைப்ரரி!
ஜல்லிபட்டி நால்ரோடு பகுதி மரத்தடி நிழலில் அமர்ந்து, முதியவர்கள் இருவர் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் ஆதங்கம் என்னனு காது கொடுத்து கேட்டேன்.
'ஏம்பா, பெரும்பாலும் ரோடு பக்கமெல்லாம் வர மாட்டீங்களே, இன்னைக்கு என்ன அதிசயமாக இருக்கு,' என ஒருவர் கேட்டார். அதற்கு மற்றொருவர், 'நான் எப்பவும், பகல்ல லைப்ரரிக்கு போய் ரொம்ப நேரம் படிக்கறது வழக்கம். சின்ன வயசுல இருந்தே பழக்கமாயிருச்சு.
ஆனா, இப்ப சில லைப்ரரிங்க சரியான நேரத்துக்கு திறக்கறதும் இல்லை. எதுக்காக பூட்டுறாங்கனு தெரியமாட்டீங்குது. மொதல்ல எல்லாம், லைப்ரரிய பூட்டிட்டு வெளியில போனா, அதுக்கான காரணத்த தகவல் பலகைல எழுதி வைச்சுட்டு போவாங்க. இப்பெல்லாம் அப்படி இல்ல. எல்லாமே மாறி போயிருச்சு.
இதப்பத்தி மேல் அதிகாரிங்களுக்கு புகாரு செஞ்சாலும், மாவட்ட அதிகாரிங்க ஆய்வுக்கும் வர்றது இல்லை. பக்கத்து ஊருல, ஒரு லைப்ரரி பத்தி புகார் போனப்ப, புகார்தாரர் கிட்ட பேசுன அதிகாரி, லைப்ரரி பூட்டி இருக்கறதே தெரியாதுன்னு சொல்லியிருக்காரு.
தங்களோட கட்டுப்பாட்டுல இருக்கற லைப்ரரி ஒரு வருஷமா பூட்டியிருக்கறது கூடவா அந்த அதிகாரிக்கு தெரியாம இருக்கும். இப்படியே போன, கிராமத்துல நுாலக வாசகர்களே இருக்க மாட்டாங்க. வாசிப்பும், நுாலகமும் கிராமங்களுக்கு முக்கியமான விஷயம்னு யாருக்கும் தெரியறது இல்லை, என, புலம்பி கொண்டே சென்றார்.
ஆசிரியர்களை குறை கூறும் அதிகாரிக!
உடுமலை பள்ளி ஒன்றில், 'இப்படியே போச்சுனா, அரசு பள்ளில, டீச்சர்ஸ் எல்லாம் போராட்டம் நடத்த வேண்டியது தான்,' என இரு ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் இப்படி சொல்றாங்கனா, ஏதாவது பின்னணி இருக்கும்னு ஏழாம் அறிவு சொன்னதும், அவங்க பேச்சை கவனித்தேன்.
ஒரு ஸ்கூல்ல நாலு பிள்ளைங்க இருந்தாலும், நாற்பது பேர் இருந்தாலும், எல்லா ஸ்கூல் விசிட்டும் ஒரே மாதிரிதான் இருக்குது. நாலு பேரு படிக்கற பள்ளில மூணு பேர் நல்லா பதில் சொன்னா மிக சிறப்புனு பதிவு செய்யறாங்க.
இதுவே, நாற்பது பேரு படிக்கற பள்ளியில, நாலு பேரு பதில் சொல்லலைனா, மீதி, 36 பேரும் நல்லா படிக்கறாங்கனு நம்மள பாராட்ட மாட்டாங்க. அந்த நாலு பேரு ஏன் படிக்கலைனு கேட்டு, வகுப்பு சரி இல்லைனு கல்வித்துறை அலுவலர்கள் பதிவு செஞ்சிட்டு போறாங்க. அத சரிபார்க்க மாவட்ட கல்வி அலுவலரும் ஒரு விசிட் வர்றாரு. அப்பவும், ஏதாவது ஒரு குறைய தேடி பிடிச்சு சொல்லிட்டு போறாங்க.
மாணவர் எண்ணிக்கை இல்லாத ஸ்கூல்ல, அந்த ஒரே கவலை மட்டும்தான். ஆனா, எண்ணிக்கை அதிகமாக இருக்கிற ஸ்கூல்ல ஆயிரம் குறை சொல்றாங்க நம்ம கல்வி துறை அதிகாரிக. இப்படி இருந்தா மாணவர் எண்ணிக்கைய அதிகரிக்க எப்படி ஆசிரியர்களுக்கு ஆர்வம் வரும்னு, பேசிக்கிட்டாங்க.
செக்போஸ்ட்ல நோட்டு போட்டு வசூல்!
உடுமலை, ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில நண்பரை சந்திக்கச்சென்றேன். சைஸ் கல் ஏற்றிட்டு, லாரிகள் வேகமா போயிட்டு இருந்தன. 'இப்படியே போச்சுனா ஒரு மலை கூட மிஞ்சாதுனு,' ஆதங்கத்தோட பேசிய நண்பரிடம் விசாரிச்சேன்.
உடுமலை, மடத்துக்குளம் பகுதியில, விதி மீறி ஏராளமான கல் குவாரிக செயல்படுது. அனுமதிச்ச அளவை விட அதிகமா, பாறைய வெட்டி எடுத்து, சைஸ் கல், ஜல்லி, எம்-சாண்ட்னு, விதி மீறி கேரளாவுக்கு கடத்துறாங்க.
புதுசா அமைச்சுட்டு இறக்கற நான்கு வழிச்சாலைல போயி, பொள்ளாச்சி வழியா கேரளாவுக்குள்ள நுழையறாங்க.
உடுமலை ஒன்பதாறு செக்போஸ்ட் வழியாக, மூணாறு ரோட்டுல, தினமும், 50க்கும் மேற்பட்ட லாரிகள்ல, கனிமவளங்கள் கடத்தறாங்க. போலீஸ் செக்போஸ்ட், வனத்துறையின் இரு செக்போஸ்ட்கள் இருந்தாலும், தங்கு தடையின்றி கனிமவளத்த கடத்தறாங்க.
செக்போஸ்ட்ல, பைக், காருக்கு வனத்துறை வாயிலாக, நுழைவு கட்டணம் வசூலிக்கறாங்க. ஆனா, தினமும் கனிமவளம் கொண்டு போகற பெரிய லாரிகளுக்கு கட்டணம் இல்ல. டூட்டில இறக்கறவங்களுக்கு, லாரிக்கு, ஐநுாறு ரூபா மாமூல் கொடுக்கணும்.
செக்போஸ்ட்ல இதுக்குனே தனியா நோட்டு போட்டு வசூல் நடக்குது. ஆளும்கட்சி செல்வாக்கு, கனிம வளத்துறை, வருவாய்த்துறை, போலீசார் ஆசியோடு, தினமும் இப்படி தான் கனிமவளத்த கடத்துறாங்கனு, சொன்னார்.
மாயமான நீர் வழித்தடத்த மீட்கணுங்க!
பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி அருகே, வயதான விவசாயி ஒருத்தரு கிட்ட, 'இங்கெல்லாம் நிலத்தடி நீர்மட்டம் எப்படி இருக்குங்க' என, கேட்டது தான் தாமதம். 'தினமலர்' பத்திரிகைகாரங்களா, உட்காருங்க. உங்க கிட்ட தான், இந்த விஷயத்த சொல்லி பேப்பர்ல போடச்சொல்லணும்னு நெனச்சுட்டு இருந்தேன். கரெக்ட்டா நீங்களே வந்து கேட்கறீங்கனு பேச ஆரம்பித்தார்.
சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி பகுதியில, கடந்த காலத்துல பெரிய நீர் வழித்தடம் ஒன்னு இருந்தது. ஆனா, வீடு கட்டி மக்கள் குடியேற்றம் வந்தது. தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் எல்லாம் கட்டினாங்க. அப்பவே, அந்த நீர் வழித்தடமும் காணாம போயிருச்சு. நீர் வழித்தடத்த ஆக்கிரமிப்பு செஞ்சுட்டாங்க.
மாக்கினாம்பட்டியில இருந்து, வால்பாறை ரோட்ட கடந்து, நீர்வழித்தடம் இருந்துச்சு. சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி ஆவணங்கள்ல, நீர்வழித்தடத்துக்கான ஆதாரங்கள் இல்லாததால மீட்க முடியல.
நீர் வழித்தடத்த ஆக்கிரமிச்சு கட்டடம் கட்டியிருக்காங்க. அதனால தான், மழை பெய்யறப்ப, தண்ணீ தேங்கி நிற்குது. இதைய செய்தியா போட்டு, நீர்வழித்தடத்த மீட்கணும்னு, சொன்னாரு.
நீர் வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றி, பராமரிக்கணும்னு முதல்வர் சொல்லியிருக்காரு. அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும் என்ன பண்ண போறாங்கனு பொறுத்திருந்து பார்ப்போம்!