ADDED : அக் 13, 2024 10:15 PM
தனியார் பஸ்களுக்கு கடிவாளமில்ல!
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டுக்கு, பழநி செல்லும் நண்பரை 'டிராப்' செய்ய இரவு நேரத்தில் சென்றேன். பழைய பஸ் ஸ்டாண்டில், வாலிபர்கள் சிலர் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். என்ன பிரச்னைனு அவங்க கிட்ட விசாரிச்சேன்.
பொள்ளாச்சி- - கோவை இடையே ரெண்டு நிமிட 'கேப்'ல, 35 அரசு மற்றும் 16 தனியாருனு 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுதுங்க. இதில், தனியார் பஸ்கள், பெரும்பாலும், காலை மற்றும் மாலை நேரத்தில், முக்கிய ஸ்டேஜ்களை தவிர்த்து, 'நான் ஸ்டாப்' என்ற பெயரில், சில டிரைவருக பஸ்சை இயக்கறாங்க.
சில தனியார் பஸ்க, இரவில், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் வந்தால், 'ஹால்ட்' செய்வதற்கு, பெதப்பம்பட்டி, வேட்டைக்காரன்புதுார் என, ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு இயக்கணும். காலையில, அந்தந்த கிராமத்துல இருந்தே தனியார் பஸ்களை இயக்கணும்னு, 'பர்மிட்' கொடுத்திருக்காங்க.
ஆனா, எந்த தனியார் பஸ் டிரைவர், கண்டக்டரும் இதனைப் பின்பற்றுவது கிடையாது. கிராம மக்களுக்கும் விழிப்புணர்வு இல்லாததால், எவரும் கேள்வி எழுப்பவும் முன்வருதில்லை, என, பிரச்னையை விவரித்தனர்.
வாரிசு சான்றுக்கு அலையவிடுறாங்க!
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில நண்பர் ஒருவர், அவரது உறவினருக்கு வாரிசு சான்றிதழ் கோட்டு, ஆன்லைனில் அப்ளை செய்திருந்தார். அதுல இறந்தவரின் குடும்பத்தார் பெயர் சேர்த்து செய்திருந்தார். இதுல அவரது தங்கையின் பெயரும் இருந்துச்சு. வருவாய் துறையினர் அந்த அப்ளிகேசனை 'ரிஜெக்ட்' பண்ணிடாங்க.
என்ன விபரம்னு வருவாய் துறையினரிடம் கேட்டதற்கு தங்கை பெயர் சேத்தாம அப்ளை பண்ணுங்கன்னு சொன்னாங்க, மறுபடியும் முதலில் இருந்து தங்கை பெயர் இல்லாம அப்ளை பண்ணியிருக்காரு. அதையும் 'ரிஜெக்ட்' பண்ணிடாங்க. என்ன ஆச்சுன்னு நேரில் போய் கேட்டா மறுபடியும் முதலில் இருந்து பதிவு செய்ய சொல்றாங்க.
தாசில்தாரை நேரில் சந்தித்து விஷத்தை சொன்னதும், சரி பண்ணி வாரிசு கொடுத்திருக்காங்க. வாரிசு சான்று வாங்க மூணு மாசம் அலையவிட்டுட்டாங்க.
மக்கள் யாராவது, தேவையான சான்றிதழ் வேணும்னு வருவாய்துறை அதிகாரிகளிடம் கேட்டா, எப்படி பதிவு செய்வதுன்னு மக்களுக்கு விளக்கம் கொடுக்குறது இல்லை. என்னென்ன ஆவணம் கொண்டு வரணும்னு மக்கள் கிட்ட சொல்லணும். அப்ப தான், இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்னு, நண்பர் சொன்னார்.
வால்பாறை நகராட்சியில என்ன நடக்குது!
வால்பாறை நகராட்சியில கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை போகுதாமே என, பஸ்சிற்காக காத்திருந்த இரு இளைஞர்கள் பேசிக்கொண்டனர். யாருப்பா சொன்னது என கேட்க, அ.தி.மு.க., காரங்க பேசிக்கிட்டாங்கப்பா, என்றார். அவங்க உரயைாடலை கவனித்தேன்.
வால்பாறையில, அ.தி.மு.க., சார்பில கடந்த வாரம் மனித சங்கிலி போராட்டம் நடந்துச்சு. நகராட்சி ஆபீஸ் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துல, 'சிட்டிங்' எம்.எல்.ஏ., கட்சி நிர்வாகிகள் கலந்துக்கிட்டாங்க.
நகராட்சியில எந்த திட்டமும் புதுசா துவங்கல. படகுசவாரி, பூங்கா, அடுக்குமாடி குடியிருப்பு என, எல்லா திட்டமும் அ.தி.மு.க., கொண்டு வந்தது. தி.மு.க., ஆட்சியில வார்டுல கூட வேலை நடக்கறதில்ல. நடக்கற ஒருசில வளர்ச்சிப்பணிகளும் தரமா இல்ல. ஆனா, பில் மட்டும் போட்டு பணத்தை கொள்ளையடிக்கறதுல நகராட்சி நிர்வாகம் குறியா இருக்கு.
மக்களின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நகராட்சி நிர்வாகம் எதற்கு. இதே நிலை தொடர்ந்தா, முறைகேடுகளை கண்டித்து, மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்னு, ஆவேசமா பேசினாங்க.
குப்பைய தரம் பிரிச்சு கொடுங்களேன்!
உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த, சமூக ஆர்வலர்களிடம் குப்பைய தரம் பிரிச்சு கொடுக்கணும்னு அலுவலர் ஒருவர் பாடம் நடத்த துவங்கினார். என்ன சொல்லறாருனு நானும் கவனிச்சேன்.
குப்பைய தரம் பிரித்து கொடுக்கணும்னு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தினாலும் யாரும் கேட்கறதில்ல. நீங்க புகார் கொடுத்தும் ஒன்னும் பிரயோஜனமில்ல.
ஊருக்குள்ள மக்கும், மக்காத குப்பைய தரம் பிரித்து கொடுக்க சொன்னா, நுாறு வீட்டுல, பத்து வீட்டுக்காரங்க தான் பாலோ பண்ணுறாங்க. மத்தவங்க, மொத்தமாக குப்பைய வச்சிருந்து, துாய்மை பணியாளர்க வரும் போது கொடுக்கறாங்க.
குப்பைய முறையா தரம் பிரிச்சு கொடுக்கணும். துாய்மை பணியாளர்களும் பாவம் தானே. குப்பைய தரம் பிரிக்காமல், துாய்மை பணியாளர்க மேல குறை சொல்லக்கூடாது.
குப்பைய தரம் பிரிச்சு கொடுக்க, மக்களிடம் சொல்லுங்கனு ஊராட்சி தலைவர்க கிட்ட சொன்னா, அவங்களும் பின்வாங்கறாங்க. கண்டிஷன் போட்டா அவங்களுக்கு ஓட்டு குறைஞ்சிடும்னு பயப்படுறாங்க.
ஒரு நல்ல விஷயத்தை கடைபிக்க வைக்க, அதிகாரிகளும், துாய்மை பணியாளர்களும் எவ்வளவு துாரம் போராடுவது, சமூக ஆர்வலர்களான நீங்களாவது விழிப்புணர்வு ஏற்படுத்துங்க, என, சொன்னார்.
மண் கடத்தல் மீண்டும் அமோகம்
உடுமலை பஸ் ஸ்டாண்ட்டுல, கிராமத்து விவசாயிகள் இருவர், மண் கடத்தல் பற்றி பேசிக்கிட்டு இருந்தாங்க. கிராமத்துல என்ன நடக்குதுனு அவங்க கிட்ட விசாரிச்சேன். அவங்க சொன்னதில் இருந்து...
பெரிசனம்பட்டி, தும்பலப்பட்டி கரடு பகுதியில, சட்ட விரோத கிராவல் மண் கடத்தல் அமோகமாக நடந்துச்சு. விவசாயிக போராட்டம் நடத்தினோம். அதுக்கப்பறம் கிராவல் மண் கடத்தல் நிறுத்தப்பட்டது.
ஒரு சில மாசம் அடங்கியிருந்த மண் மாபியா கும்பல், இப்ப, வேறு பகுதியில இருக்கற குவாரியில, கல் எடுக்கும் 'பர்மிட்' பயன்படுத்தி, சட்ட விரோதமாக கிராவல் மண் கடத்த துவங்கிட்டாங்க. வருவாய்த்துறை, கனிம வளத்துறை, போலீசாரிடம் விவசாயிகள் தரப்புல புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கல.
மண் கடத்தற கும்பலுக்கு, ஆளும்கட்சி செல்வாக்கு இருக்கு. அதிகாரிகளையும் 'கவனி'க்கறாங்க. மலையே காணாம போனாலும், இங்க இருக்கற அதிகாரிக கண்டுக்க மாட்டாங்க. யாராலையும் இவங்கள திருத்தவே முடியாதுனு, வேதனையோடு சொன்னாங்க.
லாட்டரி சீட்டு விற்பனை அமோகம்
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் டீக்கடையில் அமர்ந்து நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது, லாட்டரி சீட்டு விற்பனை பற்றி சில தகவல்களை நண்பர் கூறினார்.
லாட்டரி சீட்டுக்கு தமிழகத்துல தடை இருக்கு. ஆனா, மறைமுகமா விற்பனை மட்டும் நடக்குதுங்க. மூனு நம்பர் லாட்டரி விற்பனை தான் இப்ப ட்ரெண்டிங்.
நம்பர் சொல்லி லாட்டரி வாங்குறது பழைய டெக்னிக். இப்போ, சமூக வலைதளத்துல லாட்டரி போட்டோ எடுத்து அனுப்பி புது டெக்னிக்குல விற்பனை நடக்குது. டிக்கெட் நம்பரை 'பிளாக்' பண்ணி வச்சதுக்கு அப்பறம், மெதுவா போய் பிரின்ட் லாட்டரி டிக்கெட்டை வாங்கிக்கறாங்க. இதுல, ஏழை, நடுத்தர மக்கள் தான் அதிகமாக பாதிக்கிறாங்களாம்.
தமிழகத்துல லாட்டரியால குடும்பங்கள் பாதிக்காம இருக்க, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடும் நடவடிக்கை எடுத்தாங்க. இப்ப, ஆளுங்கட்சி ஆசிர்வாதத்துல, மறைமுகமா லாட்டரி விற்பனை அமோகமாக நடக்குது.
போலீசாரும் அப்பப்போ கேஸ் போடுறாங்க; ஆனா முழுசா தடுக்குற மாதிரி தெரியல. லாட்டரி விற்பனைய கட்டுப்படுத்த கூடுதல் எஸ்.பி., ஏதாவது நடவடிக்கை எடுக்கணும்னு நண்பர் சொன்னார்.