ADDED : அக் 28, 2024 12:27 AM
பரிசு கொடுக்கறதுல 'மேட்ச் பிக்சிங்'
பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்குறதுல கூட 'மேட்ச் பிக்சிங்' பண்ணுறாங்க, என, உடுமலையில் நடந்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில், ஆசிரியர்கள் புலம்பிக்கொண்டிருந்தனர். என்ன விஷயம்னு விசாரித்தேன்.
வழக்கமான போட்டிகள் பள்ளி அளவில் துவங்கி, வட்டாரம், மாவட்ட அளவில் நடக்குது. குழந்தைக வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்கு போவாங்கனு நம்பிக்கையோட அனுப்புவோம்.
ஆனா, திருப்பூர் மாவட்டத்துல இருக்கிற குறிப்பிட்ட பள்ளிகளுக்கு கட்டாயம் பரிசு வழங்கணும்னு எழுதப்படாத நடைமுறை இருக்க மாதிரி, எந்த போட்டி நடத்தினாலும் குறிப்பிட்ட சில பள்ளி மாணவர்களுகே பரிசு கொடுக்கறாங்க.
திருப்பூர்ல இருக்கிற சில பள்ளி மாணவருக்கும் பரிசு கொடுக்கணும்னு, மற்ற மாணவர்களின் திறமையை புறக்கணிக்கறது எந்த வகையில நியாயம்.
இதனால, உடுமலையில இருக்கற பல பள்ளிகளில் வட்டார போட்டியில வெற்றி பெற்றா போதும்னு நிறுத்திக்கறாங்க. மாவட்ட போட்டிக்கு மாணவர்கள அனுப்புங்கனு சொல்ற அரசு, இந்த மாதிரி விஷயங்களையும் கவனிச்சா நல்லாயிருக்கும். மாணவர்களின் திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்யணும்னு, சொன்னாங்க.
இலவச சைக்கிள் துருப்பிடிச்சுரும்!
வால்பாறை பள்ளிக்கூடத்துல, பிளஸ் 1 படிக்கற மாணவர்களுக்கு வழங்க, சைக்கிள் வந்து ஒரு மாசமாச்சு, இன்னும் கொடுக்க மனமில்லைனு, பஸ் ஸ்டாண்டில் இருவர் பேசிக்கொண்டனர். அவங்களோட உரையாடல் இதோ...
வால்பாறையில இருக்கற, அரசு மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில இலவச சைக்கிள் கொடுக்கறாங்க.
இங்குள்ள ஐந்து மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்க, சைக்கிள் வந்து ஒரு மாசத்துக்கு மேலாச்சு. சைக்கிள்கள வகுப்பறையில பூட்டி வச்சிருக்காங்க.
பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி கையால தான் மாணவர்களுக்கு சைக்கிள் கொடுக்கணும்னு, ஆளுங்கட்சிக்காரங்க கறாரா சொன்னதால, ஆசிரியர்களும் நமக்கேன் வம்பு என, சைக்கிளை வழங்காம, வகுப்பறையில பத்திரப்படுத்தி வச்சிருக்காங்க.
'சிட்டிங்' எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் எல்லோரும் இருக்கும் போது, எம்.பி., வந்து தான் சைக்கிள் கொடுக்கணும்னு, மாணவர்களுக்கு வழங்காம அடம்பிடிக்கிறது கொஞ்சம் கூட நல்லாயில்ல. இப்படியே போச்சுனா, வால்பாறையில பெய்யற மழைக்கு சைக்கிள் துருபிடிச்சு போகும்னு, புலம்பினாங்க.
'லிஸ்ட்'ல இருக்கு; தட்டுல இல்ல!
பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் நண்பருடன் பேசிக்கொண்டே 'வாக்கிங்' சென்றேன். அப்ப, அவரு, கலெக்டர் ஆய்வு செய்வது பற்றி பகிர்ந்து கொண்டாடர்.
'உங்களை தேடி உங்கள் ஊரில்,' திட்டத்துல, மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். அரசு அலுவலகங்கள், அரசு திட்டங்களை பார்வையிட்டாரு. அப்ப, அரசு கல்லுாரி மாணவர் விடுதிக்குள்ள, கலெக்டர் சென்று, மாணவர்களிடம் பேசினாரு. மாணவர் ஒருவர், 'லிஸ்ட்'ல இருக்குற உணவு கொடுக்கறதில்ல. கழிப்பிடம் சரியில்லைனு அடுக்கடுக்கான புகார்கள தெரிவிச்சாங்க.
இதுக்கு, விடுதி வார்டன், ஏதோதோ சொல்லி, கலெக்டரை சமாளித்தார். கலெக்டர் அங்கிருந்து நகர்ந்ததும், உடன் வந்த அதிகாரிகளிடம், 'ஒரு நாளைக்கு, ஒரு மாணவருக்கு, 35 ரூபாய் தான் உணவுக்கு ஒதுக்குறாங்க. இது பற்றாக்குறையாகத்தான் இருக்குது. மாணவர்களை சமாளிக்க முடியல,' என, வார்டன் புலம்பினாரு.
ஹாஸ்டல்ல இருக்குற குறையை சொன்னால் தான் தீர்வு கிடைக்கும். தயங்கிட்டே இருந்தா, என்ன பிரச்னைனு கலெக்டருக்கு எப்படி தெரியும்னு, அங்கிருந்த அதிகாரிக வார்டனுக்கு அட்வைஸ் பண்ணினாங்க, என, அன்றைய நிகழ்வை கூறினார்.
இலவச பட்டாவுக்கு வசூல் நடக்குது!
குடிமங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட்டில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அங்கு, முதியவர் இருவர், 'ஏனுங்க நோம்பி சமயம் வீட்டுல ஜாலியா இருக்காம, டவுனுக்குள்ள சுத்திட்டு இருக்கீங்க,' என உரையாடலை துவங்கினர்.
அதுக்கு மற்றொருவர், 'அட விவரம் கெட்ட ஆளா இருக்கற. கவர்மென்ட்ல இருந்து நம்ம தாலுகா, குடிமங்கலம் உள்வட்டத்துல மனு கொடுத்தவங்களுக்கு இலவச பட்டா கொடுக்கறாங்களாம். இதுக்கு அமைச்சர் தலைமையில கூட்டம் நடத்தி முடிச்சுட்டாங்க.
'பட்டா கிடைக்க, கவனிக்க வேண்டியவங்கள நல்லா கவனிக்கணும். குறிப்பா, கரை வேட்டிக்காரங்களகவனிக்கணும். அதுக்குதான் பணம் ரெடி பண்ண டவுனுக்கு வந்தேன். 'கவனி'க்காம விட்டா பட்டா கிடைக்காதாம். இதில்லாம, அதிகாரிகளுக்கு தனியா கவனிக்கணுமாம்.
'இதுல என்ன பயம்னா, பணத்த யாரு கிட்ட கொடுக்கணும்னு தெரியல. அந்தளவுக்கு ஆளாளுக்கு வசூல் பண்ணுறாங்க. இதெல்லாம் திருப்பூர் கலெக்டருக்கு தெரியுமானு தெரியல. உண்மையான பயனாளிகளுக்கு பட்டா கொடுத்தா, எனக்கெல்லாம் பட்டா கிடைக்கும்னு,' விஷயத்த 'நச்'னு சொல்லிட்டு கிளம்பினாரு.
ஆளுங்கட்சி ஆசி, அதிகாரிக ஆதரவு!
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டுக்கு நண்பருடன் சென்றேன். பழைய பஸ் ஸ்டாப்பில் டிராபிக் அதிகமா இருந்துச்சு. 'இப்படி இருக்கறதுக்கு டிப்பர் லாரிகள் தான் காரணம்னு' நண்பர் விஷயத்தை துவங்கினார்.
டிப்பர் லாரில அளவுக்கு அதிகமா, கனிமவள லோடு எடுத்துட்டு போறாங்க. ஸ்பீடு பிரேக்ல லாரி ஏறி இறங்கும் போது, ரோட்டுல கல் விழுது. இத பத்தி பல தடவ அரசு அதிகாரிகளிடம் கம்பிளைன்ட் பண்ணியாச்சு. ஆனா எந்த நடவடிக்கையும் எடுக்கறது இல்லை.
ஆளுங்கட்சி சப்போர்ட் இருக்குறதால, தடை இல்லாம கனிமவளம் ஓவர் லோடு ஓட்டுறாங்க. இதுமட்டுமா துறை சார்ந்த அதிகாரிகளையும் அவ்வப்போது நல்லா கவனிக்கறாங்க. அதுனால அதிகாரிகளும் கண்டும் காணாம இருக்குறாங்க.
கனிமவளம் ஓவர் லோடு போகுது, ஒரே பர்மிட்டை காட்டி பல லோடு கொண்டு போறாங்கனு, கோவை மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி ஒருத்தருக்கு போனில் தெரிவித்தேன்.
அதுக்கு அவர், 'நீங்க போனில் அதிகமா கேள்வி கேக்குறீங்க, ஏதா இருந்தாலும் ஆபீசுக்கு வாங்க, நேரில் பேசிக்கலாம்னு சொலிட்டு போன் அழைப்பை 'கட்' பண்ணிட்டாரு. ஆளுங்கட்சி ஆசியோட, அதிகாரிக ஆதரவோட கனிமவளம் கொள்ளை போகுது. இதனால, மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தா இருக்குது. இந்த பிரச்னைக்கு முடிவுவே இல்லைனு, நண்பர் அலுப்புடன் சொன்னார்.
பட்டாசு கடையில அரசியல் 'அட்ராசிட்டி'
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலம் அருகே, பட்டாசு பார்சலுக்கு வந்த நண்பர், 'பட்டாசு கடை போடுறதுல கட்சிக்காரங்க அட்ராசிட்டி பண்ணுறாங்க' என, பட்டாசாக வெடித்தார்.
பொள்ளாச்சியில சீசன் பிசினஸ் போல, தீபாவளிக்கு பலரும் பட்டாசு கடை போடுறாங்க. தீயணைப்பு துறையின் சான்றிதழ் கிடைத்த பிறகே, பிற துறைகளிடம் சான்றிதழ் பெற முடியும். ஆனா, அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்களின் தலையீடு காரணமாக, எளிதாக உரிமம் பெறும் கடைக்காரர்கள் அதற்கான விதிமுறைகளை பின்பற்றி பட்டாசு கடை அமைக்கறதில்ல.
ஏதேனும் பிரச்னைனா, தீயணைப்பு மற்றும் வருவாய்த்துறையினர் போலீசாரை கைகாட்டி ஒதுங்கிக்கறாங்களாம். திருப்பூர் வெடி விபத்தை தொடர்ந்து, அனைத்து மாவட்டத்திலும் போலீசார் 'அலர்ட்டா' இருக்க உத்தரவு வந்திருக்கு.
அதனால, போலீசார் களம் இறங்கி இருக்காங்க. அனுமதியின்றி பட்டாசு கடை வைத்திருப்போரையும், அளவுக்கு அதிகமாக பட்டாசு வச்சிருப்போரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கறாங்க. ஆனாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் தலையீடு அளவுக்கு அதிகமா இருக்கறதால போலீஸ்காரங்களும் திணறுறாங்கனு, சொல்லிட்டு, பைக்க கிளப்பினாரு.

