தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்


ADDED : ஏப் 06, 2025 09:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 09:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தி.மு.க., போராட்டத்தால கிராம சபை கூட்டம் வெறிச்


கிணத்துக்கடவில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். 'சிறப்பு கிராம சபை கூட்டத்துக்கு மக்கள் பங்களிப்பே இல்லை தெரியுமா?' என, பேச்சை துவங்கினார். அவர் பேசியதில் இருந்து...

தமிழகம் முழுக்க, மார்ச் 29ம் தேதி, உலக தண்ணீர் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தணும்னு, உத்தரவு போட்டாங்க. கிணத்துக்கடவு யூனியன்ல, 34 ஊராட்சியிலும், சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தினாங்க. ஆனா, எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் பங்கேற்கவில்லை.

என்ன விஷயம்னு விசாரிச்சா, அதே நாள்ல, அதே நேரத்துல, தி.மு.க., சார்பில் மத்திய அரசை கண்டித்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு நிதி கொடுக்கலைனு ஆர்ப்பாட்டம் நடத்தினாங்க. அந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வேலை உறுதி திட்ட பயனாளிகள் எல்லாரையும் தி.மு.க.,க்காரங்க அழைச்சுட்டு போயிட்டாங்க.

வழக்கமா, கிராம சபை கூட்டமே அவங்கள வச்சு தான் நடக்கும். அவங்க எல்லாம், ஆர்ப்பாட்டத்துக்கு போனதால, சிறப்பு கிராம சபை கூட்டத்துல மக்கள் பங்களிப்பு குறைவா இருந்துச்சு. எப்படியோ ஒரு வழியாக கூட்டத்தை நடத்தி, தீர்மானங்கள நிறைவேற்றி இருக்காங்கனு, சொன்னார்.

'கிடா' விருந்துக்கும் அரசு வாகனம்அதிகாரிங்க நடவடிக்கை மோசம்


அரசு வாகனங்கள் எல்லாம் அதிகாரிங்க ஜாலியாக சுத்தறதுக்குதான் போல, என, விவசாயிகள் இருவர், உடுமலை, மைவாடி பஸ் ஸ்டாப்பில் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தனர்.

அந்த வழியாக மடத்துக்குளம் யூனியன் ஆபிஸ் சென்று கொண்டிருந்த போது அவர்கள் பேச்சை கேட்டோம்.

யூனியன் சேர்மனுக்கு கொடுத்த 'ஸ்கார்ப்பியோ' வாகனங்கள இப்ப அதிகாரிங்க பயன்படுத்திக்கிறாங்க. அதிகாரிங்க, மக்கள் பிரச்னைகள தீர்க்கறதுக்கும், ஆய்வுக்கு போறதுக்கும், அரசு வாகனங்களை பயன்படுத்தினா தப்பில்லை.

அதை விட்டுட்டு, தங்களோடா சொந்த வேலைக்கெல்லாம் அந்த வாகனத்தை பயன்படுத்துறாங்க. அது நம்ம யூனியன்ல அதிகாரிங்க, கட்சிக்காரங்க, ஒப்பந்ததாரர் வீட்டு பங்ஷன், கிடா வெட்டு விருந்துக்கெல்லாம் அரசு வாகனத்துலதான் போறாங்க.

அப்படி போனாலும் பரவாயில்லை, போற வழியில், மக்கள் பிரச்னைகளையும் நின்னு கவனிச்சா பரவாயில்லை. கிடா விருந்துக்கு போறவங்க கண்ணுக்கு, மக்கள் பிரச்னையெல்லாம் எப்படி தெரியும்.

இதையெல்லாம் கேட்டா, வேற ஏதாவது காரணத்தை சொல்லி சமாளிப்பாங்க. நம்ம வரிப்பணம் எல்லாம் இப்படித்தான் வீணாக போகுதுனு பேசிக்கிட்டாங்க.

ஸ்மார்ட் வகுப்பு அமைச்சாச்சுஆசிரியர்களுக்கு பயிற்சி என்னாச்சு


உடுமலை தளி ரோட்டில், பள்ளிகளில் தேர்வு சம்பந்தமாக செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். அங்க, அரசு பள்ளிகளில் நடந்த சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில், பெற்றோர் ஸ்மார்ட் வகுப்பு பத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன பேசறாங்கனு கவனித்தேன்.

ஸ்மார்ட் வகுப்பு அமைக்கணும் அரசு பண்றதெல்லாம் சரிதான். ஆனா, மாணவர்களுக்கு அத பயன்படுத்தி கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்கு இன்னும் பயிற்சி கொடுக்கல.

ஸ்மார்ட் போர்டு அமைக்கப்பட்ட பள்ளிகள்ல, அதுல எப்படி ஒரு செயலி பதிவு செய்யறது, எந்த மாதிரி பயன்படுத்தணும்னு பல பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியறதில்லை.

பேருக்கு பள்ளிகள்ல ஸ்மார்ட் போர்டு மாட்டியிருக்காங்க. இப்ப அத ஆசிரியர்கள் பயன்படுத்த தயங்குறாங்க.

இப்படி இருந்தா எப்படி மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பாங்க. ஆசிரியர்களுக்கு முதல்ல, கல்வித்துறை முழுமையான தொழில்நுட்ப பயிற்சி அளிக்கணும். அப்பதான் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் பயன்படும். யானை வாங்குனவங்களுக்கு, அங்குசம் வாங்க முடியலைங்கற கதையா இருக்குனு பேசிக்கிட்டாங்க.

கிணத்த மூடி வீடு கட்ட விக்குறாங்ககாசு, பணம், துட்டுனு மூழ்கிட்டாங்க


பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், நண்பரை சந்தித்தேன். 'ரிசர்வ் சைட்ல இருந்த கிணத்த காணாம்னு புகார் கொடுக்கணும்னு,' விஷயத்தை பேச ஆரம்பித்தார்.

சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, பல பகுதிகள், விவசாய விளை நிலங்கள, தரிசு நிலம்னு சொல்லி, 'லே-அவுட்' அமைச்சுட்டு இருக்காங்க. சில லே-அவுட்ல, பொது பயன்பாட்டுக்கான ரிசர்வ் சைட் இடத்தை, ஆளும்கட்சிக்காரங்க மறைமுகமாக ஆக்கிரமிச்சுட்டு இருக்கறாங்க.

விளை நிலங்கள்ல, ஏற்கனவே இருந்த பெரிய கிணறுகள ரிசர்வ் சைட்னு விட்டிருக்காங்க. சில லே-அவுட்ல, விவசாய கிணத்தையும் மூடி, அந்த இடத்திலும் எவருக்கேனும் வீடு கட்ட விற்பனை செய்யறாங்க.

கிணத்த மூடி அது மேல வீடு கட்டக்கூடாது. அதே மாதிரி, ரிசர்வ் சைட்ல இருக்கற கிணத்த மூடி ஆக்கிரமிப்பும் செய்யக்கூடாது. இப்போதைக்கு, இரண்டு கிணறுகள மூடி, அந்த பகுதி விற்பனைக்கு தயாராக இருக்கு. இப்படியே போச்சுனா, நீர்நிலைகளே இல்லாம போயிரும். எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்குங்கறத மறந்துட்டு, காசு, பணம், துட்டு, மணி, மணினு அலையறாங்கனு, சொன்னார்.

'டாஸ்மாக் ஜோன்னு' போர்டு வச்சாமத்தவங்க ஜாக்கிரதையா போவாங்க


மடத்துக்குளம் பகுதியில, கணியூர், கழுகரை, மடத்துக்குளம், என்.ஜி.,புதுார், கொழுமம், கொமரலிங்கம், துங்காவி ஆகிய இடத்துல, டாஸ்மாக் மதுக்கடைகள் இருக்கு. அங்க, உரிய அனுமதியின்றி, சட்ட விரோதமாக, 24 மணி நேரமும் மது விற்பனை அமோகமா நடக்குது.

ராத்திரி நேரத்துல, 'தட்டினால்' திறக்கப்படுவதோடு, அதிகாலையிலும் அமோகமாக விற்கறாங்க. மாநில நெடுஞ்சாலையில் நிறைய மதுக்கடைகள் இருக்கறதால, போதை ஆசாமிகளால, அடிக்கடி விபத்து ஏற்படுது.

ரோட்டின் குறுக்கே நிற்பதோடு, வழியில் வருபவர்களை மறித்து, 'லிப்ட் கேட்பது, தாறுமாறாக வாகனங்களை ஓட்டுறதுனு ஏகப்பட்ட அலப்பறை பண்ணுறாங்க. விவசாய நிலங்கள்ல மது பாட்டில்கள உடைச்சு வீசுறாங்க. பிளாஸ்டிக் டம்ளர்கள், உணவு பொட்டலத்தை எல்லாம் வீசுறாங்க. விளை நிலங்களும், கால்நடைகளும் பாதிக்குது.

அனைத்து பார்களும், ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்கள் வசம் இருக்கறதால, போலீசாரும், டாஸ்மாக் நிர்வாகமும் எதையும் கண்டுக்கறதில்ல.

மடத்துக்குளத்துக்கு மட்டும், டாஸ்மாக் மது விற்பனைக்கு தனி ராஜாங்கம் நடக்குது. பிரதான ரோடுகளில், அஞ்சு டாஸ்மாக் மதுக்கடைகள் இருக்கறதால, 'டாஸ்மாக் ஜோன்'னு எச்சரிக்கை அறிவிப்பு பலகையாவது வச்சாங்கனா, எல்லாரும் ஜாக்கிரதையா போவாங்கனு, பேசிக்கிட்டாங்க.

பட்டியல்ல இருக்கற உணவு கிடைக்கலவிஷயத்தை வெளியே சொல்ல முடியல


பொள்ளாச்சி அருகே, நா.மூ., சுங்கத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பரை சந்தித்து பேசிக்கொண்டு இருந்தேன். நண்பர், 'விடுதியில உணவு சரியாக கொடுக்கலேன்னு சொல்லுறாங்க,' என பேச ஆரம்பித்தார்.

கோட்டூருல அரசு கல்லுாரி மாணவர் விடுதி செயல்படுது. கல்லுாரிகள்ல படிக்கற மாணவர்கள் இங்கு தங்கியிருக்காங்க. இங்கு பட்டியல் போட்டு வச்சிருக்கற மாதிரி, உணவு கொடுக்காம, காலையில சமைச்ச உணவையே, ராத்திரி வரைக்கும் வச்சிருந்து கொடுக்கறாங்களாம். அதனால, மணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுதாம்.

உணவு பட்டியல்ல இருக்கற மாதிரி, உணவு கேட்டா, விடுதில டூட்டியில இருக்கறவங்க எந்த பதிலும் சொல்லறதில்லையாம். அதிகாரிக யாராவது விசிட் வந்தா, எல்லாம் நல்லா இருக்குது; பட்டியல் படி சாப்பாடு போடுறாங்கனு சொல்லணும் என, சொல்லி வச்சிருக்காங்களாம்.

இங்க என்ன நடந்தாலும், என்கிட்ட மட்டும் சொல்லுங்க; யாருகிட்டயும் எதையும் சொல்லக்கூடாது என சொல்லி, விடுதியில் பொறுப்பில் இருக்கறவரு சொல்லி இருக்காறாம். விஷயத்த வெளியில சொன்னா, ஏதாவது பிரச்னை ஏற்படும்னு பயந்து, மாணவர்களும் அவங்க சொல்லறதுக்கு தலையை ஆட்டிட்டு இருக்காங்களாம்னு, சொல்லி முடித்தார்.

தேர்தலை புறக்கணிக்க இப்பவே முடிவு பண்ணிட்டாங்க!

வால்பாறை மலை மேலே ஆயிரம் பிரச்னை இருக்கு, ஆனா... யாரும் கண்டுக்க மாட்டேங்கராங்க, என, இரண்டு இளைஞர்கள் டீ கடையில் பேசிக்கொண்டனர். அவங்க பேச்சை கவனித்தேன்.சுற்றுலா பயணியரின், சொர்க்கம் பூமினு வால்பாறையை சொல்லறோம். இங்க இருக்கற வளமையமான வனம், உயிரினங்கள், நீர் ஆதாரம், நதிகள் ஆகியவற்றை எதிர்காலத்துல மாசில்லாமல் பாதுகாக்கணும். இயற்கையோடு இணைந்து மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் பழக்கத்தை கொண்டு வரணும், நீரின்றி வறண்டு கிடக்கும் நிலபரப்புக்கு இங்குள்ள நீரை கொண்டு சென்று பயன்படுத்தும் வகையில, மத்திய அரசு 'சுற்றுச்சூழல்உணர் திறன் மசோதா' வரைவு அறிக்கைய கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கல் பண்ணியிருக்கு.இந்த மசோதாவை உடனடியாக ரத்து செய்யணும்னு, மத்திய, மாநில அரசுகள வலியுறுத்தி வால்பாறையில கடையடைப்பு, வேலைநிறுத்த போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்னு ஏகப்பட்ட போராட்டங்கள நடத்தினாங்க.ஆனாலும், மசோதாவை ரத்து செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கறாங்க. இந்நேரத்துல, வால்பாறையில இருக்கற மக்களை எல்லாம் வெளியேத்திடுவாங்க, யாரும் நுழைய முடியாத வனப்பகுதியா மாத்திடுவாங்கனு தகவல் பரவியிருக்கு. இதுனால, நம்ம ஊரு மக்கள் அதிருப்தியில இருக்காங்க. இந்த மசோதாவை ரத்து பண்ணலைனா, வர்ற சட்டசபை தேர்தலை புறக்கணிக்க பேச்சு நடத்திட்டு இருக்காங்க. என்ன நடக்கப்போகுதுனு புரியலனு, பேசிக்கிட்டாங்க.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us