ADDED : ஜூன் 29, 2025 11:11 PM
ஆளுங்கட்சியில பிரிவினை அரசியல்தலைமை கண்டுக்காததால அதிருப்தி
உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரில் மழைக்கு ஒதுங்கிய ஆளுங்கட்சி உடன்பிறப்புகள், 'மாவட்ட நிர்வாகிங்க செய்யற பிரிவினை அரசியல்ல, ஒன்றியங்க எல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாகிட்டு இருக்காங்க,' என புலம்பி கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதில் இருந்து...
உடுமலை தொகுதியில, வர்ற எலக் ஷன்ல எப்படியாவது கட்சியை ஜெயிக்க வைக்க, கட்சி தலைமை பல நடவடிக்கை எடுக்குது. பக்கத்து மாவட்ட அமைச்சர, உடுமலை, மடத்துக்குளம் ரெண்டு தொகுதிகளுக்கு பொறுப்பாளரா போட்டு இருக்குது. ஆனா, கட்சியோட திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிங்க, பிரிவினை அரசியல்ல மட்டும்தான் கவனம் செலுத்தறாங்க.
ரெண்டு தொகுதியிலும் இருக்கும் ஒன்றிய பொறுப்பாளர்களில், தங்கள் ஆதரவாளர்களுக்கு தனியா 'குரூப் கிரியேட்' பண்ணிட்டாங்க. அந்த குரூப் கட்சியை கண்டுக்காம, மாவட்ட நிர்வாகி ஒருத்தருக்கு மட்டும் தனிநபர் துதி பாடிட்டு இருக்காங்க.
அவங்க என்ன செஞ்சாலும், மாவட்ட நிர்வாகிங்க கண்டுகிறது இல்லை. இப்படி நம்ம ஒன்றிய நிர்வாகிகளேயே பல குரூப்பா பிரிச்சா எப்படி கட்சி ஜெயிக்கும்.
சமுதாய ரீதியாகவும், ஜால்ரா கோஷ்டிகளையும் துாக்கி விடறத நிறுத்தினாத்தான், வர்ற எலக் ஷன்ல ஜெயிக்க முடியும். இதெல்லாம் கட்சி தலைமை கண்டுக்காம இருக்கறது வேதனையா இருக்கு, என பேசியபடி அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.
விளையாட்டுல ஜெயிச்சாலும்சான்றிதழுக்கு இழுத்தடிக்கறாங்க!
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே, அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களை சந்தித்தேன். மாணவர்களுக்கு உடனே சான்றிதழ் வழங்குவதில்லை, என, புகார் தெரிவித்தனர். என்ன விஷயமென விசாரித்தேன்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ஒவ்வெரு வருஷமும் பள்ளிக்கல்வித்துறை வாயிலாக, குடியரசு மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் நடத்தறாங்க. இந்த போட்டியில, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த, 6 முதல் பிளஸ் 2 வரையான, மாணவ, மாணவியர் பங்கேற்கறாங்க.
இந்த போட்டியானது, 14, 17 மற்றும் 19 வயசு பிரிவுல நடக்குது. குறுமையம், மாவட்டம், மண்டலம் மற்றும் மாநில அளவில் போட்டி நடத்தறாங்க. நடப்பாண்டு போட்டி விரைவில் துவங்கப்போகுது.
ஆனா, ஒவ்வொரு வருஷமும், குறுமையம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டியில, அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றால், அதற்கான சான்றிதழை முறையா வழங்கறதில்லை. குறிப்பா மாவட்ட போட்டியில வெற்றி பெற்றால், சான்றிதழ் கொடுக்க காலதாமதமாகுது. இதனால, சான்றிதழுக்காக மாணவர்கள் அலைமோத வேண்டியிருக்குனு, விபரத்தை சொன்னாங்க.
ரயில்வே ஸ்டேஷன்ல 'எல்லை' மீறல்பயணியருக்கு கொடுக்கறாங்க தொல்லை
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அவரோ புலம்பிக்கிட்டே இருந்தார். என்னனு விசாரிச்சேன்.
சில மாசத்துக்கு முன், இங்க காதல் ஜோடிகள் தொல்லை, 'குடி'மகன்களோட தொல்லை, திருட்டு பயம் எல்லாமே அதிகமா இருந்துச்சு. அதுக்கப்புறம், சி.சி.டி.வி., கேமரா அங்கங்க பொருத்தினாங்க. அப்புறம் எல்லாமே குறைய ஆரம்பிச்சுது.
இப்போ, மறுபடியும் பிளாட்பாரத்தில் உட்கார்ந்து 'சரக்கு' குடிக்கறாங்க. காதல் ஜோடிகள் எல்லை மீறி அட்ராசிட்டி பண்ணுறாங்க. ரயில் பயணியருக்கு தொல்லை கொடுக்கற மாதிரி சில ஆளுக நடந்துக்கறாங்க. இதனால், இந்த ரோட்டுல பெண்கள் தனியா செல்ல பயப்படுறாங்க.
இங்க இருக்கிற சி.சி.டி.வி., கேமரா எல்லாம் வேலை செய்கிறதா? இல்லையானு எல்லாருக்கும் சந்தேகமா இருக்குது. இதை ரயில்வே நிர்வாகம் கவனித்து, கேமராக்கள் செயல்படுதானு ஆய்வு பண்ணணும். போலீசாரும் அவ்வப்போது ரவுண்ட்ஸ் வந்து, தப்பு பண்றவங்கள கண்டித்து வெளியேற்றணும். இல்லாட்டி, சட்ட நடவடிக்கை எடுக்கணும்னு, புலம்பினார்.
இடமிருக்கு... வகுப்பறை கட்டலபொறுப்பில்லாத அரசுத்துறைகள்
அமராவதி அணையை சுற்றிப்பார்த்து விட்டு, பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தோம். அப்போது, பள்ளியிலிருந்து வந்த பெற்றோர், குழந்தைகளின் நிலையை கூறி கொந்தளித்தனர். அவர்கள் பேசியதில் இருந்து...
பேருக்கு தான் அமராவதி நகர் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆனா, குழந்தைங்களுக்கு முழுமையான வகுப்பறை வசதி கூட இல்ல. நெருக்கடியில உட்கார்ந்திருக்காங்க.
நடுநிலை பள்ளியில இருந்து, உயர்நிலையா தரம் உயர்த்தினாங்க. ஆனா, வகுப்பறை கூட கல்வித்துறையால கூடுதலா கட்ட முடியல. வகுப்பறை கட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் பக்கத்துலயே இருக்கு.
அந்த இடத்த கேட்டு வாங்கி கட்டடம் கட்டாம, கல்வித்துறை பத்து வருஷமா மவுனமா இருக்கு. அரசு துறைகளுக்குள்ள நடக்கற போட்டாபோட்டியால, குழந்தைங்க தான் சிரமப்படுறாங்க.
மாவட்ட நிர்வாகத்திலிருந்து, இந்த பிரச்னைய விசாரிக்க வருவாய் துறைக்கு சமீபத்துல கடிதம் போயிருக்கு. ஆனா, வருவாய்த்துறையும் 'கப்சிப்'னு தான் இருக்கு. இதுக்கு மேல பெற்றோர் களத்துல இறங்கி போராட்டம் நடத்தினா தான் வேலை நடக்கும் போலிருக்கு, என, நொந்து கொண்டனர்.
தி.மு.க., கனவுல மண்ணு விழுந்ததுஇப்பவே அழுத்தம் கொடுக்கறாங்க
வால்பாறை டீக்கடையில் இளைஞர்கள், 'தி.மு.க.,காரங்க கனவுல மண்ணு விழுந்திருச்சுனு,' அரசியல் மேட்டர் பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்க பேச்சை கவனித்தேன்.
வால்பாறை சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வசம் இருந்துச்சு. எம்.எல்.ஏ.,வாக இருந்த அமுல்கந்தசாமி உடல் நலக்குறைவால் போன வாரம் இறந்துட்டாரு. எப்படியும் இடைத்தேர்தல் நடக்கும், போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆயிடலாம்னு தி.மு.க., வி.ஐ.பி.,க்கள் எதிர்பார்ப்புல இருந்தாங்க.
ஆனா, அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால, இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லைனு தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கு. இதனால, இடைத்தேர்தல் கனவுல பந்தாவா பவனி வந்த தி.மு.க., பிரமுகர்கள் கனவுல மண்ணு விழுந்திருச்சு.
கடந்த முறை, கம்யூ.,கட்சிக்கு தொகுதியை தாரைவார்த்துக் கொடுத்ததால் தி.மு.க., வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்த முறை தொகுதியை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்காம, தி.மு.க.,வினர் தேர்தல்ல போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்னு கட்சி தலைமைக்கு இப்ப இருந்தே அழுத்தம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.
அதனால, வரப்போகற சட்டசபை தேர்தல்ல ஆளும்கட்சியினர் களமிறங்கணும்னு முடிவு பண்ணிட்டாங்கனு, பேசிக்கிட்டாங்க.
ஆளுங்கட்சி நிர்வாகி அட்ராசிட்டிஆம்லேட்டுக்கு 'அக்கப்போர்'
உடுமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு, நண்பர் லோகேஸ்சை அழைத்து வர சென்றிருந்தேன். அப்ப, 'தி.மு.க.,காரங்க பிரியாணி கடையில சண்டை போட்டத பார்த்திருக்கோம். நம்ம ஊருல ஆம்லேட்டுக்கு சண்டை போட்டிருக்காங்கனு,' பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன, விஷயம்னு கவனித்தேன்.
ஏரிப்பாளையத்திலுள்ள பிரியாணி கடைக்கு, கடந்த வாரம் இரவு, தி.மு.க., நகர இளைஞரணி நிர்வாகி, அஞ்சு பேருடன் போயிருக்காரு. ஆளுங்கட்சிங்கற அலப்பறையோட தோரணையா பேசிக்கிட்டு பிரியாணிய ஒரு கை பார்த்திருக்காங்க.
அப்ப, ஆம்லேட் ஆர்டர் செய்திருக்காங்க. ஆம்லேட்ட கொண்டு வந்த சப்ளையர், அதன் மீது பெப்பர் துாவாம டேபிளுக்கு சப்ளை செய்தது பிரச்னையாயிருச்சு. பெப்பர் துாவாததால ஆவேசமடைந்த உடன்பிறப்புகள், தகராறு செய்தோடு, சப்ளையரை தாக்கியிருக்காங்க.
டேபிள், சேர்கள இழுத்து போட்டு சேதப்படுத்தியிருக்காங்க. இதெல்லாம், கடையில இருக்கற 'சிசிடிவி' கேமராவுல பதிவாகியிருக்கு. இதனை அழிக்க, உடன்பிறப்புகள் முயற்சித்த நிலையில, வேறு ஒரு தரப்பினர் அந்த காட்சிகள கைப்பற்றி, சமூகவலைதளங்கள்ல பரப்பி பரபரப்பாக்கிட்டாங்க.
போலீசாரும் பிரியாணி கடைக்கு போய், நடந்த சம்பவத்தை விசாரிச்சு, கடை உரிமையாளரிடம் மனு வாங்கிட்டு, புகார் ஏற்பு ரசீது கொடுத்திருக்காங்க. உடுமலை தி.மு.க.,வுல இப்ப இது தான் 'ஹாட் டாப்பிக்' ஆக இருக்குனு, பேசிக்கிட்டாங்க.